ஐஸ்வர்யா ரவிசங்கர்
பிபிசி தமிழ்

ஐம்பதுக்கும்
மேற்பட்ட உயிரிழப்புகளையும், பல லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள்
அழிவதற்கும் காரணமான கஜ புயல் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை நம்மால்
எளிதில் மறந்துவிட முடியாது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்
பாதிக்கப்பட்டிருந்தாலும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,
புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.
அரசு
தரப்பும் சில தனியார் அமைப்புகளும் பல நிவாரண உதவிகள் செய்திருந்தாலும்
தற்போதும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல மக்கள் வீடுகளை இழந்து தவித்து
வருகின்றனர். இந்த நிலையில், கஜ புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு குறைந்த செலவில் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை உருவாக்கும் போட்டியை யூடியூப் சேனல் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு நடத்தியிருந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற பிறகு இதன்மூலம் கிடைத்த உந்து சக்தியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த செலவில் அதிக வீடுகளை கட்டித்தருவதை தனது இலக்காகக் கொண்டு செயலாற்றி வருகிறார் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதன் ராஜ் என்ற இளைஞர்.
2.5 லட்சத்திம் ரூபாயில் 'உறையுள்' வீடு
தனி ஆளாக வளர்த்தெடுத்த தாய், தன்னை நம்பியுள்ள தங்கை தம்பி, வருமானத்தில் பின்தங்கிய குடும்பம், தமிழ் வழி கல்வியில் படிப்பு. இப்படிப்பட்ட பின்புலத்தை கொண்ட மதன், உதவித்தொகை மூலம் கட்டிட கலையில் பட்டம் பெற்றவர். இருபத்து எட்டு வயதாகும் இவருக்கு சிறு வயது முதலே கட்டிட வடிவமைப்பில் அதிக ஆர்வம் இருந்து வந்தது.இயற்கை பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாகவும் தரமாகவும் வீடுகள் அமைத்து தருவது அரசு எதிர்கொள்ளும் பெரிய சவால். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள நினைத்த மதன், வெறும் வருவாய் மட்டும் ஈட்டித்தரும் சராசரி வேலையை விரும்பாதவர் என்பதால், பல மாத ஆராய்ச்சிகளுக்கு பிறகு 'உறையுள்' என்று பெயரிடப்பட்ட மலிவு விலை வீட்டின் இரண்டு பதிப்புகளுக்கான திட்டத்தை இவர் உருவாக்கினார்.
இதன்படி 340 சதுர அடி பரப்பளவில் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கை அறை, சமையலறை, குளியலறை, குழந்தைகள் படிக்கும் அறை என ஒரு சராசரி குடும்பம் வசிப்பதற்கு போதுமான வீட்டை 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் மதன் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.
கஜ முதல் ஃபானி வரை
கடந்த மே மாதம் ஒடிஷா மாநிலத்தை புரட்டிப்போட்ட ஃபானி புயலில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளினால் பாதுகாக்கப்பட்டது ஒரு புறம் இருக்க, 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததால் அங்குள்ள மக்களின் நிலை தற்போதும் மோசமாக இருப்பதாக மதன் கூறுகிறார்.''நாகப்பட்டினத்தில் 'உறையுள்' மலிவு விலை வீட்டின் இரண்டாவது பதிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நானும் எனது குழுவினரும் முகாமிட்டிருந்தோம். அப்போது ஒடிஷாவில் ஏற்பட்ட ஃபானி புயல் குறித்த செய்திகளை கேள்விப்பட்டவுடன் அங்குள்ள மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், எனது பைக்கை எடுத்துக்கொண்டு ஒடிஷாவுக்கு தனியாக கிளம்பிவிட்டேன்,'' என தனது பயணத்தை விவரிக்கிறார் மதன்.

Image caption ஒடிஷாவில் உள்ளூர் மக்களுக்கு வீடு கட்ட கற்றுத்தரும் மதன் ராஜ்
60,000 ரூபாயில் வீடு சாத்தியமா?
சமூக ஆர்வலரும் உள்ளூர்வாசியுமான திலீப் என்பவரின் உதவியுடன் ஒடிஷாவின் பல கிராமங்களுக்கு சென்று தனது 'உறையுள்' மலிவு வீட்டை எப்படி கட்டமைப்பது என்பதை விளக்கினார் மதன். ஆனால் அங்குள்ள கள நிலைமையை நேரில் பார்த்த பிறகு மலிவு வீட்டின் மூன்றாவது பதிப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார்.''உள்ளூரில் நிலவும் சூழல், கால நிலை, வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் எளிதில் கிடைக்கின்றனவா என்பனவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த மலிவு வீட்டின் முதல் பதிப்பையும் இரண்டாம் பதிப்பையும் உருவாக்கினேன். எனவே இந்த காரணிகளை மையமாகக் கொண்டு 240 சதுர அடி பரப்பளவில் வெறும் அறுபதாயிரம் ரூபாயில் மலிவு வீட்டின் மூன்றாவது பதிப்புக்கான மாதிரி திட்டத்தை ஒடிஷாவுக்கு சென்ற பிறகு உருவாக்கினேன்.''

மூங்கில், மண், தண்ணீர் பாட்டில்களால் கட்டப்படும் வீடு
'மதன் சீவ்' என்ற பெயரில் நான்கு பேர் கொண்ட சொந்த நிறுவனத்தை நாகப்பட்டினத்தில் தொடங்கியிருக்கிறார் இவர். ஆர்வமுள்ள எவரும் தனது நிறுவனத்தில் இணைந்துகொள்ளலாம் என்று சமூக வலைதள பக்கத்தில் இவர் வெளியிட்ட பதிவைப் பார்த்து பல மாவட்டங்களில் இருந்தும் தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவித்துவருவது தனக்கு களிப்பூட்டுவதாக மதன் கூறுகிறார்."சூரிய சக்தியில் இயங்கும் மின்சாரம், காலநிலைக்கு ஏற்றவாறு வீட்டை அமைப்பது, வீட்டின் கட்டமைப்பில் தொழில்நுட்பத்தை புகுத்துவது போன்றவற்றை செயல்படுத்த வெறும் கட்டிட கலை மட்டும் தெரிந்திருந்தால் போதாது. எனவே தொழில்முறையாக கட்டிட கலையை பயின்றவர்கள் மட்டுமில்லாமல், புவியியல், சூழலியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றை பயின்றவர்களையும் எனது நிறுவனம் வரவேற்க தயாராக இருக்கிறது.

உலகளவில் பிரபலப்படுத்த விருப்பம்
தனது நிறுவனத்தில் சேர அழைப்பு விடுத்துள்ளது ஒரு புறம் இருக்க, சாமானியர்களுக்கு புரியும் வகையில் கட்டிட கலையை தமிழில் பயிற்றுவிக்க யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் இந்த இளைஞர். ''காக்கை குருவி போன்ற பறவைகளும் நத்தை ஆமை போன்ற விலங்குகளும் தனக்கான வீட்டை தானே கட்டிக்கொள்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் தனக்கான வீட்டை அமைக்க மற்ற மனிதர்களை சார்ந்து இருக்கிறான். எனவே அனைவருக்கும் தங்கள் வீட்டை முழுவதும் வடிவமைக்க தெரியாவிட்டாலும் சில அடிப்படை விடயங்களை பயிற்றுவிக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இந்த அறிவு வீடு கட்டும்போது ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கவும், பொருளாதார ரீதியாக ஏமாறாமல் இருக்கவும் உதவும்.''இந்தியாவோடு மட்டும் சுருங்கிவிடவில்லை மதனின் இலக்கு. பொருளாதார நிலையில் பின்தங்கிய ஆப்பி ரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்று அங்குள்ள சூழல் மற்றும் மக்களின் கலாசாரத்திற்கு ஏற்றார் போல் மலிவு விலையில் வீடுகள் அமைக்கவும் உள்ளூர் மக்களுக்கு எளிய முறையில் கட்டட கலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விரும்புகிறேன். எனது இந்த நீண்ட பாதையில் 'உறையுள்' வீடு சிறு தொடக்கம் என்கிறார் இந்த இளைஞர்.
https://www.bbc.com/tamil/india-48558180
No comments:
Post a Comment