Tuesday, May 28, 2019

வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கலைக் குறிப்புகள்' ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 - 27.05.2003)!

ஜெவ்ரி பாவா Geoffrey  Bawa  - 'வெப்பநில நவீனத்துவக்' (Tropical Modernism) கட்டடக்கலைப்பாணியின் மூலவர்!

- ஜெவ்ரி பாவா -
இலங்கையின் முக்கியமான கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கியவர் ஜெவ்ரி பாவா. இவரது முழுப்பெயர் ஜெவ்ரி மான்னிங் பாவா (Geoffrey Manning Bawa ). உலகக் கட்டடக்கலையில் ஆசியாக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராகத் தன் கட்டடங்களின் மூலம் திடமாகத் தடம் பதித்தவர் இவர். குறிப்பாக இன்று உலகக் கட்டடக்கலையில் வெப்பநில நவீனத்துவம் (Tropical Modernism) என்று அறியப்படும் கட்டடக்கலைப்பாணிக்கு அடிகோலியவராக அறியப்படுபவர் இவர்.

இவரது தந்தையாரான பி.டபிள்யு. பாவா செல்வச்சிறப்பு மிக்க சட்டத்தரணியும், நீதிபதியுமாவார். ஆங்கில, முஸ்லிம் இரத்தக்கலப்புள்ளவர். தாயாரான பேர்த்தா மரியன்னெ ஸ்ராடர் ஜேர்மனிய, ஸ்ஹொட்டிஸ் மற்றும் சிங்கள இரத்தக்கலப்புள்ளவர். இவரது மூத்த சகோதரரான பெல்விஸ் பாவா புகழ்பெற்ற 'நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞராக (Landscape Architect) விளங்கியவர்.

ரோயல் காலேஜ் மாணவரான ஜெவ்ரி பாவா ஆரம்பத்தில் படித்தது ஆங்கிலமும் சட்டமும். ஆங்கில இலக்கியத்தில் புனித காதரின்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜில் இளங்கலைப்பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னர் Middle, London இல் சட்டத்துறைப்பட்டதாரியானார். இலங்கை திரும்பிய இவர் இரண்டாவது யுத்தகாலத்துக்குப் பின்னர் கொழும்பிலுள்ள சட்ட நிறுவனமொன்றில் பணியாற்றினார். பின்னர் இவரது தாயாரின் மறைவினையடுத்து சட்டத்துறையை விட்டு விலகிய இவர் சுமார் இரு வருட காலம் சர்வதேச பயணங்களிலீடுபட்டார். அமெரிக்கா, ஐரோபா என்று பயணித்த இவர் இத்தாலியில் வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்க எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் சரிவரவில்லை. 1948இல் நாடு திரும்பிய இவர் கைவிடப்பட்டிருந்த இறப்பர் தோட்டமொன்றினை வாங்கினார். அதனையொரு இத்தாலியப் பாணிப்பூங்காவாக ஆக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவருக்கில்லாதது பெருங்குறையாகவிருந்தது. 

இக்காலகட்டத்தில் கொழும்பிலுள்ள எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) அவர்களது கட்டடக்கலை நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்பொழுது கட்டடக்கலைஞர் ரீட் மட்டுமே உயிருடனிருந்தார். அவருக்குக் கீழேயே பயிற்சியில் இணைந்தார். ரீட் மறைவினையடுத்து கேம்ரிட்ஜ் திரும்பிய இவர்  இங்கிலாந்திலுள்ள கட்டடக்கலைஞர் சங்கத்தில் மாணவராக இணைந்தார். அங்கு கட்டடக்கலைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பின்னர் 'ரோயல் இன்ஸ்டிடியூட் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ்' (The Royal Institute of British Architects ) அமைப்பின் 'அசோசியட்' உறுப்பினரானார். தனது 38ஆவது வயதில் நாடு திரும்பிய ஜெவ்ரி பாவா தான் பணியாற்றிய எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) கட்டடக்கலை நிறுவனத்தைத் தனது பொறுப்பில் கொண்டு வந்து தனது கட்டடக்கலைப் பணியினைத் தொடர்ந்தார்.


1959இல் 'டானிஸ்' கட்டடக்கலைஞரான உல்ரிக் பிலெஸ்னெர் (Ulric Plesner) இவருடன் இணைந்தார். இவர்கள் இருவருமாகப் பல கட்டடங்களை தமக்குரிய தனித்துவமான பாணியில் வடிவமைத்துத்தார்கள். இப்பாணியே பின்னர் 'வெப்பநில நவீனத்துவம்' என்று உலகக் கட்டடக்கலையில் 'வெப்பநில நவீனத்துவ'ப் பாணியாக அறியப்பட்டது. கட்டடங்கள் அமைந்துள்ள நிலத்தின் தன்மைக்கேற்ப, அங்குள்ள காலநிலைக்கேற்ப அப்பகுதியின் பாரம்பரியக் கட்டடக்கலைக்கூறுகளை உள்வாங்கி, அங்கு வாழுவோருக்கு இன்பத்தைத்தரும் வகையில், கட்டடக்கலையின் நவீனத்துவக் கூறுகளையும் கலந்து கட்டடங்களை வடிவமைப்பதில் வல்லவர் இவர். காலனித்திய, பாரம்பரிய மற்றும் நவீனத்துவக் கட்டடக்கலையின் கூறுகளை உள்வாங்கி அம்மண்ணின் கலாச்சாரக் கூறுகளையும் கவனத்தில்கொண்டு , வெப்பமண்டலப் பிரதேசங்களில் வடிவமைக்கப்பட்ட இவரது கட்டடஙகள் இவரது கட்டடக்கலைப்பாணியில் பிரதிபலித்த தனித்துவம் காரணமாக உலகக்கட்டடக்கலையில் குறிப்பாக ஆசியாக் கட்டடக்கலையில் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. இலங்கை மட்டுமல்லாமல், இந்தியா, இந்தோனேசியா என்று பிற நாடுகளிலும் இவர் கட்டடங்களை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டங்களைபெற்ற ஜெவ்ரி பாவா , பின்னரே தனது நடுத்தர வயதில் கட்டடக்கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அவ்விதம் ஈடுபடுத்திக்கொண்ட அவர் உலகக் கட்டடக்கலையில் குறிப்பாக ஆசியாக் கட்டடக்கலையில் தனது தனித்துவமான பாணியில் வடிவமைக்கப்பட்ட கட்டடங்கள் மூலம் 'வெப்பநில நவீனத்துவம்' என்னும் கட்டடக்கலைப்பாணியின் மூலவராக  இடம் பிடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல பிரமிக்கத்தக்கதும் கூட.

தனது கட்டடக்கலைப்பங்களிப்புக்காக ஆகாகான விருது, இலங்கை அரசின் விருதுகளைப்பெற்ற ஜெவ்ரி பாவா இலங்கையில் வடிவமைத்த அவரது சிறப்பினை வெளிப்படுத்தும் முக்கியமான கட்டடங்களில் சிலவாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

1. கோட்டேயில் அமைந்துள்ள புதிய பாராளுமன்றக் கட்டடம்..
2. பெந்தோட்ட  கடற்கரைக் ஹொட்டல்.
3. ருகுண பல்கலைக்கழகக் கட்டடங்கள்
4. கந்தான ஹொட்டல்
5. புளூ வார்ட்டர் ஹொட்டல்

- கோட்டேயில் அமைக்கப்பட்டிருந்த புதிய பாராளுமன்றக் கட்டடம் -

எண்பதுகளில் நகர அதிகார சபையில் நானும் நண்பர் கட்டடக்கலைஞர் வைரமுத்து அருட்செல்வனும் நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞரான  (Landscape Architect) திருமதி 'கெஸ்டர் பசநாயக்கா'வுடன் கோட்டேயில் அமைக்கப்பட்டிருந்த புதிய பாராளுமன்றக் கட்டடத்தைச் சுற்றிய நிலப்பரப்பு வடிவமைப்பு வேலைகளில் இணைந்து பணியாற்றியிருந்தோம். அதன் காரணமாக புதிய பாராளுமன்றம் திறப்பதற்கு முன்னர் அங்கு சென்று அதன் உட்புறத் தோற்றங்களையெல்லாம் கண்டு களித்திருக்கின்றோம். அப்பொழுது கட்டடக்கலைஞர் ஜெவ்ரி பாவாவின் கட்டடக்கலை வடிவமைப்பில் எம்மை மறந்திருக்கின்றோம். இப்பொழுதும் நினைவிலுள்ளது.

இப்பதிவுக்கான முகநூலில் வெளியான எதிர்வினைகள்:

Janaki Karthigesan Balakrishnan இந்தப் பதிவினை வாசிக்கும் போது நானும் கந்தளம சுற்றுலாத் தளத்தைத்தான் உடனே எண்ணினேன். இந்தப் பதிவினைப் படித்து கருத்துரைக்கு வரும் வரை அதன் கட்டடக் கலைஞர் யார் என்று தெரிந்திருக்கவில்லை அல்லது மனப்பாடம் செய்து வைத்திருக்கவில்லை. எனது இரு பயணங்கள் போது குடிசைகள் போலமைக்கப்பட்ட அறைகளில் தங்கி, ஏனைய ஹோட்டல் வசதிகளை அனுபவித்தேன். அந்த ஹோட்டலும், குடிசை போன்ற அறைகளும் ஒரு கிராமமும், நகரமும் ஒருங்கிணைந்தது போல், ஆதிகுடியினரின் கலாச்சாரத்தை அதில் புகுத்தி, அழகான அமைதியான சுற்றுப்புறச் சூழலில் ஒரு அற்புதமான சுற்றுலாத் தளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. சிறீ லங்கா பயணம் செல்பவர்கள் ஒரு நாளேனும் அங்கு சென்று வந்தால் மகிழ்ச்சியடைவீர்கள். செல்வதற்கு பகல் பயணத்தை மேற்கொள்வதையே நல்லதென்று கூறுவேன். தம்புளை எனும் இடத்திற்கு சென்று, உள்ளே அதிகம் வெளிச்சம் அற்ற பாதையில் நீண்ட பயணம். அவ்வாறெல்லாம் அமைந்தது தான் அதன் சிறப்பிற்குக் காரணம். நான் முதல் தடவை வேறு அனுசரணையுடன் சென்று நன்கு அனுபவித்ததால், அடுத்த தடவை எனது குடும்பத்தினரை அழைத்துச் சென்றேன். இதைக் கூறாவிட்டால் கடமையிலிருந்து தவறி விடுவேன். செலவும் அதிகம்தான். கந்தளம பற்றி முகநூல் வாயிலாக நண்பர்களுக்கு தெரியப்படுத்த முன்பே விரும்பினேன். அச் சந்தர்ப்பத்தை இப்பதிவின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்த கிரிதரனுக்கு மிக்க நன்றி.

Memon Kavi அருமையான பதிவு

Memon Kavi '' 'வெப்பநில நவீனத்துவம்' என்று உலகக் கட்டடக்கலையில் 'வெப்பநில நவீனத்துவ'ப் பாணியாக அறியப்பட்டது. கட்டடங்கள் அமைந்துள்ள நிலத்தின் தன்மைக்கேற்ப, அங்குள்ள காலநிலைக்கேற்ப அப்பகுதியின் பாரம்பர்யக் கட்டடக்கலைக்கூறுகளை உள்வாங்கி, அங்கு வாழுவோருக்கு இன்பத்தைத்தரும் வகையில், கட்டடக்கலையின் நவீனத்துவக் கூறுகளையும் கலந்து கட்டடங்களை வடிவமைப்பதில் வல்லவர் இவர். காலனித்திய, பாரம்பரிய மற்றும் நவீனத்துவக் கட்டடக்கலையின் கூறுகளை உள்வாங்கி அம்மண்ணின் கலாச்சாரக் கூறுகளையும் கவனத்தில்கொண்டு , வெப்பமண்டலப்பிரதேசங்களில் வடிவமைக்கப்பட்ட இவரது கட்டடஙகள் இவரது கட்டடக்கலைப்பாணியில் பிரதிபலித்த தனித்துவம் காரணமாக உலகக்கட்டடக்கலையில் குறிப்பாக ஆசியாக் கட்டடக்கலையில் முக்கியமானவையாகக் கருதப்பட்டன'' இது மிக முக்கியான குறிப்பு கட்டிட கலை ஆர்வலர்களுக்கு

Memon Kavi அதே போல் ஒரு நிலப்பகுதியினை சமப்படுத்தாமல் அது இருக்கும் அதே அமைப்பில் வைத்து கட்டிடங்கள் என்பதும் ஒரு உத்தியாக இருந்த து. இலங்கை யில் அம்மாதிரியான அக்கட்டிடங்கள் பல உண்டு. (சும்மா ஒரு நினைவுக்கு இலங்கை மகரகம வில் அமைந்துள்ள் இளைஞர் சேவை மன்ற கட்டிடம். அப்படியான ஒரு கட்டிடமாகவே பட்டது.) இது கட்டிட ஒர் உத்தி என்றும் , அது ஜெர்மனியில் கட்டிட கலையில் அறிமுகப்பட்ட உத்தி என்றலாம் சொல்லப்ட்டது. ஆனால் அது பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. இங்கு இதனை நான் குறிப்பிட காரணம். எனது சிறிய வயதில் எனது தாய் மாமா வசித்த இலங்கை கண்டி அக்குறணையில் நிலத்தின் அமைப்புக்கு அமைப்பு ஏன்ப உள்ளூர் bassமார்கள் கட்டிய கட்டிங்கள் கண்டு நான் வியந்து போனது உண்டு.அங்கு மேடும் பள்ளமும் சின்ன சின்ன கற்பாறைகளும் அதிகமான அக்குறணை ப்குதியில் அமைந்து கட்டிடங்களுக்கு சிறிய பாலம் வளைந்து நெளிந்து போகும் படிகற்கள் அப்படிவான வடிவில் பல கட்டிங்கள்.

Memon Kavi Lafees Shaheed (இந்த குறிப்பு நண்பர் lafees shaheed யின் கவனத்திற்கு கிரி! ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 - 27.05.2003) பற்றிய: உங்கள் குறிப்பு எனக்கு 60களின் இறுதியில் அக்குறணையில் நான் பாரத்த கட்டிங்களை எனக்கு நினைவுப்படுத்தின.

Vadakovy Varatha Rajan புதிய தகவலை தந்தத்திற்கு நன்றி

Vimalendran Barathithas Very interesting article! Great

Kanagaratnam Balendra நன்றி. நல்ல பதிவு.

Gv Venkatesan Well-done...super

Naveen Navaratnarajah Kandalama Heritage Hotel also one of his architectural work.

Naveen Navaratnarajah இந்த கந்தளம விடுதியில் 2003 ல் சில நாட்கள். தங்கியிருந்தேன். குளியலறைகளின் வெளிப்புறச்சுவர்கள் முற்றிலும் கண்ணாடியாலானவை. மறைப்பு ஒருவகையில் படர்கொடிகளே (kind of curtain creepers hanging from roof garden)

உசாத்துணை விபரங்கள்
1. விக்கிபீடியா: https://en.wikipedia.org/wiki/Geoffrey_Bawa
2. Spotlight: Geoffrey Bawa by Patrick Kunkel  https://www.archdaily.com/770481/spotlight-geoffrey-bawa
3. Geoffrey Bawa :http://www.geoffreybawa.com/

ngiri2704@rogers.com

https://vngiritharan230.blogspot.com/2018/02/1-geoffrey-bawa-23-71919-27052003.html

வ.ந.கிரிதரனின் (பதிவுகள்.காம்) வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள்: பேராசிரியர் நிமால் டி சில்வாவின் 'பாரம்பரியக் கட்டடக்கலை'யும் 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்'.


- பேராசிரியர் நிமால் டி சில்வா -
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் 'பாரம்பரியக் கட்டடக்கலை' (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு. 

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நிமால் டி சில்வாவின் 'பாரம்பர்யக்கட்டடக்கலை' பாடத்தின் மூலம்தான் நான் முதன் முதலில் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றியும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். தொல்லியற் துறையில்  நன்கு அறியப்பட்ட ரோலன் சில்வா அவர்களின் (இவர் ஒரு கட்டடக்கலைஞரும் கூட) 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையொன்றினை பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் எமக்கு அறிமுகம் செய்தார். எவ்விதம் பண்டைய அநுராதபுர நகரமானது சந்தையினை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்பது பற்றியும், நகரைச் சுற்றி இரு வேறு வட்ட ஒழுக்கில் எவ்விதம் தாதுகோபங்கள் கட்டப்பட்டன என்பது பற்றியும் விபரிக்கும் ஆய்வுக் கட்டுரை அது.  பேராசிரியர் ரோலன் சில்வா அவர்கள் பின்னர் இலங்கைத் தொல்பொருள் நிலையத்திணைக்களத்தின் தலைவராகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் விளங்கியவர்.


எனக்கு நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி அறியும், ஆராயும் ஆர்வத்தை ஏற்படுத்திய காரணங்களிலொன்று பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் அறிமுகப்படுத்திய அக்கட்டுரை. அவர் அன்று அறிமுகப்படுத்திய ரோலன் சில்வாவின் 'அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையின் விளைவாக எனது ஆய்வு நூலான 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' தமிழகத்தில் ஸ்நேகா/மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு விடயத்துக்காகவே எப்பொழுதுமென் நினைவில் நிற்கும் ஆளுமைகளிலொருவராக பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் விளங்குவார்.

இச்சமயத்தில் பெளத்த கட்டடங்கள், நகர அமைப்புகள் மற்றும் இந்துக்களின் நகர அமைப்பு, நகர அமைப்புகள் பற்றி குறிப்பாக அவற்றின் வடிவங்கள் பற்றிச் சிறிது நோக்குவது அவசியம். இது பற்றி எனது 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூலில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை இங்கு எடுத்து நோக்குவது நல்லது.

" இந்துக்களின் கட்டடங்களையும், பெளத்தர்களின் கட்டடங்களையும் நோக்குபவர்கள் ஒன்றினை இலகுவாக அறிந்து கொள்வார்கள். பெளத்த கட்டடங்கள், தாது கோபுரங்கள் போன்றவை வட்டவடிவில் அமைக்கப்பட்டன. இந்துக்களின் கட்டடங்களோ சதுர அல்லது செவ்வக வடிவங்களில் அமைக்கப்பட்டன. அநுராதபுர நகர, கட்டட அமைப்புத் துறையினை வட்ட வடிவம் எவ்வளவு தூரம் பாதித்துள்ளதென்பதை ரோலன் டி சில்வா என்ற சிங்களப் பேராசிரியர் ஆராய்ந்து தெளிவு படுத்தியுள்ளார். சந்தையை மையமாக வைத்து உருவான பண்டைய அநுராதபுர நகரைச் சுற்றி வட்ட ஒழுக்கில் வட்ட வடிவமான தாது கோபுரங்கள், இரு வேறு ஒழுக்குகளில் அமைக்கப்பட்டிருந்ததை அவரது ஆய்வுகள் புலப்படுத்தும். வட்ட வடிவம் இயக்கத்தை உணர்த்தும். தோற்றமும், அழிவும், இரவும், பகலும் இவ்விதமாக ஒருவித வட்ட ஒழுக்கில் நகரும் காலத்தை மேற்படி வட்டவடிவம் உணர்த்தும். மேலும் இவ்வட்ட வடிவம் நாம் வாழும் பூமிக்குரிய வடிவ இயல்பையும் குறிக்கும். பொருள் முதல்வாதக் கோட்பாட்டினை அதிகம் நம்பும் பெளத்தர்கள் வட்டவடிவத்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமானதொன்றல்ல.


மாறாக சதுரவடிவம் ஓர் இறுதியான, தெளிவான வடிவம். வட்டத்தைப்போல் இது இயக்கத்தைப் புலப்படுத்துவதில்லை. இந்துக்கள் இப்பிரஞ்சத்தை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுர வடிவான வெளியாகவும், அவ்வெளியில் நேரத்தின் பாதிப்பை இராசிகளாலும் உருவகித்தார்கள். நவீன பெளதிகம் கூறுவதைப் போல இந்துக்களும் இப்பிரஞ்சத்தை ஒருவித வெளி-நேர (Space- Time) அமைப்பாகத்தான் விளங்கி வைத்திருந்தார்களென்பது இதிலிருந்து புலனாகின்றது. இவ்விதம் இப்பிரஞ்சத்தைச் சதுர வடிவாக உருவகித்த இந்துக்கள் இவ்விதிகளுக்கமைய உருவாக்கப்பட்ட கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றையும் சதுர வடிவாகவே (அல்லது செவ்வக) அமைத்தார்களென்பது ஆச்சரியமானதொன்றல்லதான். மாறாக சதுரவடிவம் ஓர் இறுதியான, தெளிவான வடிவம். வட்டத்தைப் போல் இது இயக்கத்தைப் புலப்படுத்துவதில்லை. இந்துக்கள் இப்பிரபஞ்சத்தை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுரவடிவான வெளியாகவும், அவ்வெளியில் நேரத்தின் பாதிப்பை இராசிகளாலும் உருவகித்தார்கள். நவீன பெளதிகம் கூறுவதைப் போல் இந்துக்களும் இப்பிரபஞ்சத்தை ஒருவித வெளி(Space) நேர (Time) அமைப்பாகத்தான் விளக்கி வைத்திருந்தார்களென்பது புலனாகின்றது. இவ்விதம் இப்பிரபஞ்சத்தைச் சதுர வடிவாக உருவகித்த இந்த்துக்கள் இவ்விதிகளிற்கமைய உருவாக்கப்பட்ட கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றையும் சதுர வடிவாகவோ (அல்லது செவ்வக வடிவாகவோ) அமைத்தார்களென்பதும் ஆச்சரியமானதொன்றல்லதான். இவ்விதம் சதுரவடிவில் அமைக்கப்பட்ட 'வாஸ்து' புருஷமண்டலத்திற்கேற்ப நகரங்கள் அல்லது கட்டடங்கள் அமைக்கப்பட்டன. வாஸ்து புருஷனை இச்சதுர வடிவில் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் தெய்வங்கள் ஒவ்வொருவரும் சிறுசிறு சதுரங்களாக உருவாக்கப்பட்டார்கள். மேற்படி சதுரவடிவான வாஸ்து புருஷ மண்டலம் மேலும் பல சிறுசிறு சதுரங்களாகப் பிரிக்கப்பட்டன. இத்தகைய சிறுசதுரங்கள் 'படா'க்கள் (Padas) என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு சிறு சதுரத்தையும் ஒவ்வொரு தெய்வம் ஆக்கிரமித்திருக்கும். வாஸ்து புருஷமண்டலத்தின் மையப்பகுதியில் பலசிறு சதூரங்களை உள்ளடக்கிய பெரிய சதுரமொன்று காணப்படும். இச்சதுரத்தை பிரம்மனிற்கு உருவகப்படுத்தினார்கள்."  ['நல்லூர் இராஜதானி நகர அமைப்பு', வ.ந.கிரிதரன், பக்கம் 49-55]

- பேராசிரியர் ரோலன் சில்வா -
முதன் முறையாக பண்டைய அநுராதபுர நகர் அமைப்பைப்பற்றி நிமால் டி சில்வாவின் 'பாரம்பரியக் கட்டடக்கலை' பாடத்தின் மூலம அறிந்தபோது எனக்கு இலங்கைத்தமிழர்களின் ஆட்சியிலிருந்த பண்டைய நகர்களின் நகர அமைப்பு பற்றிய சிந்தனைகளோடின. எனக்குத் தமிழர்களின் நகர அமைப்பு பற்றிய சிந்தனைகள் என் மாணவப்பருவத்தில் வாசித்த பல தமிழகத்து எழுத்தாளர்களின் வரலாற்றுப்புனைகதைகளை வாசித்த சமயங்களில் ஏற்பட்டிருக்கின்றன. தஞ்சாவூர், பழையாறை, குடந்தை, காஞ்சிபுரம், புகார், மதுரை, வஞ்சி என்று பண்டையத்தமிழ் அரசர்களின் தலைநகர்கள் பற்றிய கனவுகளில் திளைத்திருக்கின்றேன். சங்க இலக்கியங்களில் , சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் கூறப்பட்டுள்ள அத்தலைநகர்களின் நகர அமைப்புகள் பற்றிய தகவல்கள் என்னைப் பிரமிப்படைய வைத்திருக்கின்றன. ஆனால் அதே சமயம்  இலங்கையில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் சிறந்து விளங்கிய அநுராதபுரம், யாப்பக்கூவா, பொலனறுவா போன்ற நகர்களின் அமைப்புகள் பற்றியெல்லாம் தகவல்கள், ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கையில் ஈழத்தமிழர்களின் தலைநகர்கள் பற்றியெல்லாம் போதிய தகவல்கள் இல்லாமலிருந்தது எனக்கு வியப்பினைத்தந்தது. ஏன் அண்மைக்காலத்தில் சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்னர் சிறந்த விளங்கிய நல்லூர் இராஜதானி பற்றியெல்லாம் கூடப் போதிய தகவல்கள் இல்லையென்பது வியப்பினைத் தந்த அதே சமயம் வரலாற்றை, வரலாற்றுச்சின்னங்களைப்பேணுதல் போன்ற விடயங்களில் தமிழர்கள் காட்டிய அசிரத்தையையும் அந்நிலை வெளிப்படுத்தியது. பழம் பெருமை பேசும் தமிழர்கள் வரலாற்றைப்பேணுவதில் காட்டிய அசிரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இவ்விடயத்தில் அவர்கள் சிங்கள மக்களிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். வரலாற்றுச்சின்னங்களைப்பேணுவதற்கு அவர்கள் ஆட்சியிலிருந்த அந்நியராட்சியைக் குறை கூறலாம். அவ்விதமானால் ஏன் அவர்களால் தம் வரலாற்றை முறையாகப் பதிவு செய்து வைத்திருக்க முடியவில்லை என்னும் கேள்விக்குப் பதில் கூற முடியாது போய் விடும். இன்றும் மயில்வாகனப்புலவரின் பல வழுக்களுள்ள வரலாற்று நூலொன்றுதானே ஆதாரமாக எம்மிடம் இருக்கிறது? ஏன் யாருமே தமிழர்களின் வரலாற்றை முறையாகப் பதிவு செய்திருக்கவில்லை? இதற்கு முக்கிய காரணமாகத் தமிழர்களின் அசிரத்தையையே கூறுவேன். இதற்கு அண்மைக்கால உதாரணங்களிலொன்றாகக் கீழ்வரும் விடயத்தைக் கூறுவேன்.

- பண்டைய அநுராதபுர நகர் -
நாற்பதுகளில் கோப்பாயில் தமிழ் அரசர்களின் அரண்மனை இருந்ததாகக்கருதப்படும் கோப்பாய்க் கோட்டை என்னும் பகுதி பற்றி சுவாமி ஞானப்பிரகாசர் வரலாற்று ஆய்விதழொன்றில் கட்டுரையொன்று எழுதியிருக்கின்றார்.  இது பற்றி எழுபதுகளின் இறுதியில் அல்லது எண்பதுகளின் ஆரம்பத்தில் கலாநிதி கா. இந்திரபாலாவை யாழ் பல்கலைக்கழகத்தில் சந்தித்தபொழுது முதன்முறையாக அறிந்துகொண்டேன். அதன்பின் அப்பகுதியைப்பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். திருமதி வூட்ஸ்வேர்த் என்பவருக்குச் சொந்தமாக விளங்கிய பழைய கோட்டை (Old Castle) என்னும் அப்பகுதி பல்வேறு பகுதிகளாகப்பிரிபட்டுச் சிறுத்துப்போயிருந்தது. இதனைப்பற்றிச் சிறு கட்டுரையொன்றும் வீரகேசரியில் எழுதியிருக்கின்றேன். ஏன் சுவாமி ஞானப்பிரகாசரின் காலத்தில் அவரால் சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் இன்றுவரை அப்பகுதி முறையாகப்பாதுகாக்கப்படவில்லை? தமிழ் அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் இவ்விடயத்தில் என்ன நடவடிக்கைகள் இதுவரையில் அப்பகுதியைப் பாதுகாப்பது பற்றி எடுத்தார்கள்? எவ்விதமான ஆய்வுகளை இதுவரையில் செய்திருக்கின்றார்கள்? இவற்றையெல்லாம் செய்வதற்கு ஏன் யாரும் பெரிதாக முயற்சிகள் செய்யவில்லை? வரலாற்றுச்சின்னங்களைப்பாதுகாப்பதில் எம்மவர்கள் காட்டும் அசிரத்தைக்கு இதுவோர் மிகச்சிறந்த உதாரணம். 

இந்நிலையில்தான் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றிய என் கவனத்தைத்திருப்பினேன். தர்க்கரீதியாக வரலாற்று நூல்கள் கூறும் தகவல்கள், வெளிக்கள ஆய்வில் கிடைக்கப்பெற்ற காணிப்பெயர்கள், வரலாற்றுச்சின்னங்களின் அடிப்படையில், பண்டைய கட்டடக்கலை ,நகர அமைப்பு பற்றிக் கிடைக்கப்பெறும் தகவல்கள் அடிப்படையில் என்னால் முடிந்த அளவுக்கு இந்நூலில் விளக்கியுள்ளேன். இவ்வகையில் இந்நூல் ஒரு முதனூல். இதுவரை யாரும் செய்யாததொன்று. பொதுவாக ஈழத்துத் தமிழ் மன்னர்களின் வரலாறு  பற்றி, தலைநகர்கள் பற்றி கிடைக்கப்பெறும் வரலாற்று நூல்களில் , கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இதுவரையில் இலங்கைத்தமிழ் மன்னர்கள் காலத்தில் புகழ்பெற்று இராஜதானியாக விளங்கிய நகர் பற்றி ஆய்வுக்கண்ணோட்டத்தில் அணுகப்பட்டிருப்பது இதுவே முதற் தடவை. அன்றைய நல்லூர் இராஜதானி நகர அமைப்பு இன்றைய நகர அமைப்பில் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைத் தர்க்கரீதியாக அணுகியிருக்கின்றேன் எனது இந்த ஆய்வில். எதிர்காலத்தில் இன்னும் பலர் விரிவாக ஆய்வுகளைச் செய்வதற்கு இந்நூல் அணுகுமென்பது என் எண்ணம். அவா. 

நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றிய ஆய்வுக்கு என்னைத்தூண்டிய காரணிகளில் முக்கியமான காரணி பேராசிரியர் நிமால் டி சில்வா தனது 'பாரம்பரியக் கட்டடக்கலை' பாடத்தில் அறிமுகப்படுத்திய ரோலன்ட் சில்வாவின் 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையே. அந்த வகையில் அவருக்கு நான் என்றுமே நன்றிக் கடமைப்பட்டிருக்கின்றேன். 

உசாதுணை:

1. ரோலன் சில்வாவின் பண்டைய அநுராதபுர நகர் அமைப்பு பற்றிய கட்டுரை.
2. சுவாமி ஞானப்பிரகாசரின் கோப்பாய்ப் பழைய கோட்டை பற்றிய கட்டுரை.
3. வ.ந.கிரிதரனின் 'கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய கோலம்' கட்டுரை (வீரகேசரி)
4. வ.ந.கிரிதரனின் 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல்.
5. V.N.Giritharan  - Nallur Rajadhani: City Layout  [ https://vngiritharan23.wordpress.com/category/architecture-town-planning ]

ngiri2704@rogers.com

நன்றி: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4358:-2-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

https://vngiritharan230.blogspot.com/2018/02/2.html#more

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் : களனி விகாரைக் 'கண தெய்யோ' (பிள்ளையார்)


களனியா ரஜமகா விகாரைப்பிள்ளையார் களனி ரஜ மகா விகாரை மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தபோது எமது முதலாவது வருடத்தில் 'வெளிக்களக் கட்டடக்கலை' (Field Architecture) என்றொரு பாடமுமிருந்தது. அப் பாடம் வார இறுதி நாள்களிலொன்றான சனிக்கிழமையில்தானிருக்கும். அப்பாடத்தின் நோக்கம் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களைச் சென்று பார்ப்பது. எமது பல்கலைக்கழகம் கொழும்பு மாநகரிலுள்ள மொறட்டுவைப்பகுதியிலிருந்ததால் கொழும்பு மாநகரிலுள்ள கட்டடங்களையே சென்று பார்ப்பது. கட்டடக்கலைஞர்களின் கவனத்துக்குள்ளாகிய இல்லங்கள், பழம்பெரும் சரித்திரச்சின்னங்கள், நகரின் சுதந்திர சதுக்கம் போன்ற முக்கிய கட்டடங்கள் ஆகிய பல கட்டடங்களைச் சென்று பார்த்திருக்கின்றோம். அவ்விதம் சென்று பார்த்த எல்லாக்கட்டடங்களின் விபரங்களும் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் சில கட்டடங்களுக்கான எமது விஜயங்கள் மட்டும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளன.

- கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் -
இப்பாடத்துக்கு எமக்கு விரிவுரையாளராகவிருந்தவர் இன்று தெற்காசியாவின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராக அறியப்படும் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் அவர்களே. புகழ்பெற்ற கட்டடக்கலைஞராக விளங்கிய ஜெஃப்ரி பாவாவின் (Geoffrey Bawa) மாணவர். இவரைபற்றி Anjalendran: Architect of Sri Lanka  என்னுமொரு நூலினை டேவிட் ராப்சன் (David Robson) என்பவர் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அஞ்சலேந்திரனின் கட்டடக்கலைப்பங்கபபளிப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதும் எண்ணமுண்டு. யாழ் நகரிலுள்ள பல்வேறு காரணங்களுக்காகப் புகழ்பெற்ற அசோகா ஹொட்டலை வடிவமைத்தவர் இவரே. அக்ஹொட்டல் வடிவமைக்கப்பட்ட காலத்தில்தான் இவர் எங்களுக்கு விரிவுரையாளராகவிருந்தார். அதனால் எமது விடுமுறைக்காலத்தில் அக்ஹொட்டல் கட்டி முடிக்கப்பட்டிருந்த ஆரம்ப காலத்தில் அங்கு சென்று பார்த்திருக்கின்றோம்.  இவர் மிகவும் புகழ்பெற்ற தமிழ் அரசியல்வாதிகளிலொருவராக   விளங்கிய 'அடங்காத்தமிழன்' என்று அறியப்பட்ட, முன்னாள் வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த சுந்தரலிங்கம் அவர்களின் பேரன். எமக்கு இப்பாடமெடுத்துக்கொண்டிருந்ந காலத்தில் எப்பொழுதும் டெனிம்ஸ் பாண்ட் அணிந்து வருவார். இவர் சிறுவயதிலிருந்தே கொழும்பு வாசியாகவிருந்தவரென்று நினைக்கின்றேன்.


களனி ரஜா மகா விகாரை இலங்கையின் சிங்கள மக்களைப்பொறுத்தவரையில், குறிப்பாகப் பெளத்த சமயத்தைவரைப்பொறுத்தவரையில் மிகவும் சரித்திர , சமய முக்கியத்துவம் வாய்ந்தது. கெளதம புத்தர் பரிநிர்வாண நிலையடைந்து , எட்டு ஆண்டுகள் கடந்து, மூன்றாவது தடவையாக இலங்கைக்கு வந்த சமயம் கி.மு.500 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டதாக பெளத்தர்களால் நம்பப்படுகிறது. கோட்டை இராச்சியத்தில் புகழ்பெற்று விளங்கிய இப்பெளத்த ஆலயம் பின்னர் போர்துகீசர் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுப் பின்னர் கீர்த்தி சீறீ ராஜசிங்கன் காலத்தில் மீள்புனருத்தானம் செய்யப்பட்டது.

கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன்எமது 'வெளிக்களக்கட்டடக்கலை'ப் பாடத்துக்கான விஜயத்தின்போது ஒருமுறை விரிவுரையாளர் அஞ்சலேந்திரனுடன் களனி ரஜமகா விகாரைக்கும் சென்றிருந்தோம். யாழ்தேவியில் கொழும்பு நோக்குப் பயணிக்கையில் , பண்டைய பெளத்தர்களின் புனித நகர்களிலொன்றாகிய அநுராதபுரத்தைப் புகைவண்டியில் கடக்கையில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயகிரி விகாரை, ரூவன் வெலிசாய மற்றும் ஜீத்தவனாராம தாதுகோபங்களைப் பார்த்திருந்த எனக்கு களனி விகாரையே முதன் முதல் நான் நேரில் சென்று பார்த்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விகாரையாகும்.

இந்த விகாரைக்கான விஜயத்தை நினைக்கையில் எனக்கு உடனடியாகத்தோன்றுமொரு விடயம் விகாரையின் பின்புறச் சுவரிலுள்ள இந்துக்கடவுள் ஒருவரின் சிலைதான். அவர்தான் கண தெய்யோ என்று பெளத்த சிங்களவர்களால் அழைக்கப்படும் பிள்ளையார். அந்தப்பிள்ளையாரையே இங்குள்ள புகைப்படமொன்றில் நீங்கள் காண்கின்றீர்கள்.

தென்னிலங்கையில் இவை போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல புராதனக் கட்டடங்களுள்ளன.இவற்றையெல்லாம் நாம் சுற்றுலாக்களில் சென்று பார்க்கவேண்டும். துரதிருஷ்ட்டவசமாக நாட்டில் இதுவரை நிலவிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் காரணமாக இவ்வகையான பழமையின் சின்னங்களையெல்லாம் இனக்கண் கொண்டு பார்க்கும் போக்கு நிலவியது. அந்நிலை இனியாவது மாற வேண்டும். நாட்டு மக்கள் மத்தியில் நிலவும் சகல வகையான சமூக, அரசியல் முரண்பாடுகளெல்லாம் காலப்போக்கில் நீங்கி, மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத்திரும்பும் நிலை உருவாகட்டும். உருவாகுமென்று நம்புவோம். பாருங்கள் இது போன்ற ஆலயங்களில் இந்துக்கடவுள்களும், பெளத்தக்கடவுள்களும் எவ்வ்வளவு ஒற்றுமையாக விளங்குகின்றார்கள். நாம்தாம் வெளியில் அடிபட்டுக்கொண்டிருக்கின்றோம்.

முகநூல் எதிர்வினைகள்:

1. Maheswaran Murugaiah அநேகமாக எல்லா புத்த விகாரைகளிலும் பிள்ளையார் சிலை காணப்படுகின்றது .தங்களின் காவல் தெய்வம் என்றும் சொல்வார்கள்

2. Pena Manoharan நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் அநுராதபுரம் ரூவானவெலிசாய கோயிலில் உட்பிரகாரத்தில் எல்லாளன் ஒரு திசையில் யானைமீதும் எதிர்த்திசையில் துட்டகைமுனுவும் இருந்ததை என் பால்யத்தில்....அறுபதுகளில் பார்த்த ஞாபகம்.இது சரிதானா என்பதைப் பழைய படங்கள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.2015 இல் நான் போனபோது இரண்டு சிலைகளும் வெளிப்பிரகாரத்தில் தற்காலிகக் கூடாரத்தில் மூடி வைக்கப்பட்டிருந்தது.உங்கள் கணினி...கட்டிடத் தொழில்நுட்ப ஞானத்தால் என் கூற்றை ஆய்வு செய்து உண்மைநிலை உரைக்க முடியுமா நண்பரே..

3. Thilina Kiringoda Giri, Anjalendran came for only two sessions of experiencing in Architecture in the first year. Two weeks later Prof. KRS Pieris sacked him as a Visiting Lecturer because he had criticized Prof. Pieris.

4. Giritharan Navaratnam //Two weeks later Prof. KRS Pieris sacked him as a Visiting Lecturer // Hi Kiringoda, it is news to me. I still remember visiting Kelaniya Raja Maha Vihara with him. It was a memorable visit for me. For me, it looks like he came more than two sessions. May be I am wrong. Kelaniya visit is still fresh in my memory. We also visited few beautiful houses and Independence Square with him, I think.

5. Thilina Kiringoda Do not forget that I was the batch rep.

6.Athanas Jesurasa '// பாருங்கள் இது போன்ற ஆலயங்களில் இந்துக்கடவுள்களும், பெளத்தக்கடவுள்களும் எவ்வ்வளவு ஒற்றுமையாக விளங்குகின்றார்கள். நாம்தாம் வெளியில் அடிபட்டுக்கொண்டிருக்கின்றோம்.// - சடப் பொருள்கள் சண்டை பிடிக்க முடியாதுதானே! அதே பிள்ளையார் சிலைகளைக் குளத்தில் வீசிவிட்டு, "பிள்ளையார் குளிக்கப் போய்விட்டார்" (கணதெய்யோ நான்ட கியா) என்று கூக்கிரலிட்டதெல்லாம் யதார்த்தத்தில் நடந்துமுள்ளன!

7. Siva Sivakumaran I remember him as a quite outspoken architect, speaking his mind not fearing about the established architects or academics. Can't think of anyone else of that calibre - perhaps Vidura is another one...

8. Giritharan Navaratnam Hi kiringoda , Siva, Siva Sivakumaran , is one year senior to us. I hope you remember him.He was staying at Molpey with Baskaran & Kunasingam..

9. Siva Sivakumaran Thilina, to further refresh your memory, I left Justin's just before you joined.

10.Thilina Kiringoda Siva Sivakumaran I remember you. During my first year, your batch mates Hiran Leitan and Praneeth Amaratunga and I were in the same boarding house at Rawatawatta. After they had left RL Ravichandra joined me. From your batch only 7 are remaining in the country. Dotta, Dottie, Ganepola, Panapitiya, Anura Jayathilaka and Dharshanie. From ours Piyal, Saba, Nihal Bada, Kulatunga, Mandawela, Saroja, Champa and Chaya are in the country. Shanthi and Aryadasa passed away. We are planning to celebrate the 40th year of our getting together in October this year. I am trying to collect contact details of our batch mates who are domiciled abroad. If you know any pl forward it to me via e-mail: ltkirin@hotmail.com.

ngiri2704@rogers.com

நன்றி: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4379:-2-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள்: லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)


- லூயிஸ் சல்லிவன்-
ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.

இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.

தேரோ , எமர்சன், மெல்வில் போன்றோரின் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட லூயிஸ் சல்லிவன் சிற்பி ஹொரதியோ கீறினோவுக்குப் பல வருடங்களுக்குப் பின் பிறந்தவர். அவர் 1896இல் எழுதிய 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' (The Tall Office Building Artistically Considered) என்னும் கட்டுரையில் இக்கருதுகோளினை முதன் முதலாகப் பாவித்திருகின்றார். இருந்தாலும் தனது இக்கருதுகோளுக்குக் காரணமானவராக அவர் கி.மு 80–70 காலகட்டத்தில் பிறந்து கி.மு 15 ஆண்டளவில் இறந்த புகழ்பெற்ற ரோமன் கட்டடக்கலைஞரான மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ (Marcus Vitruvius Pollio) என்பவரைப் பின்னொரு சமயம் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ புகழ்பெற்ற 'கட்டடக்கலைபற்றி' என்னும் அர்த்தத்திலான De architectura என்னும் கட்டடக்கலை பற்றிப் பத்துத் தொகுதிகள் அடங்கிய நூலொன்றினை எழுதியிருக்கின்றார். கு.மு. காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்நூலானது கட்டடக்கலை வரலாற்றில் மிகவும் முக்கியமானதோரு நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலில் அவர் கட்டடமொன்றின் அமைப்பானது திடம், பயன் மற்றும் அழகு (firmitas, utilitas & venustas) ஆகிய மூன்று முக்கியமான பண்புகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.


- வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டடம் -
கட்டடக்கலைஞரான லூயிஸ் சல்லிவன் 'வடிவமானது எப்பொழுதும் அதன் செயற்பயனைத் தொடரும்' (form ever follows function) என்ற கூற்றினைத்தான் தனது 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' என்னும் கட்டுரையில் பாவித்திருந்தாலும், அக்கூற்றே காலப்போக்கில் எளிமைப்படுத்தப்பட்டு 'வடிவம் அதன் செயற்பயனைத் தொடரும்' (form follows function) என்று பரிணாமடைந்து கட்டடக்கலை உலகில் நிலைத்து நின்று விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உருக்கினாலான உயர்ந்த கட்டடங்களுக்குரிய வடிவினை உருவாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வழக்கிலிருந்த பாணிகளை மீறிப் புதிய பாணிகளைச் சூழல் வேண்டி நின்ற வேளையில் , கட்டடமொன்றின் வடிவமானது பழைய கோட்பாடுகளின் அடிப்படையில் (form follows precedent) தெரிவு செய்யப்பட-போவதில்லையென்றால் , கட்டடமொன்றின் வடிவமானது அக்கட்டடத்தின் நோக்கத்துக்கேற்ப , செயற்பயனுக்கேற்பத் (form follows function) தெரிவு செய்யப்பட வேண்டுமென்று லூயிஸ் சல்லிவன் கருதினார். 'செயின்ற்' (புனித) லூயிஸ், மிசூரியிலுள்ள லூயிஸ் சல்லிவன் வடிவமைத்த வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டமானது அவரது 'வடிவம் செயற்பயனைத் தொடரும்' கருதுகோளினை வெளிப்படுத்தி நிற்கும் முக்கியமான கட்டடங்களிலொன்றாகும்.
* function என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. ஒரு கட்டடமொன்றின் function என்னும்பொது அது செயற்படுகையில் அதன் பயன் என்னும் அர்த்தத்தைக் கொள்ளலாமென்பதன் அடிப்படையில் இங்கு 'செயற்பயன்' என்னும் சொல்லினைப் பாவித்துள்ளேன்.

'செயின்ற்' (புனித) லூயிஸ், மிசூரியிலுள்ள லூயிஸ் சல்லிவன் வடிவமைத்த வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டடமானது அவரது 'வடிவம் செயற்பயனைத் தொடரும்' கருதுகோளினை வெளிப்படுத்தி நிற்கும் முக்கியமான கட்டடங்களிலொன்றாகும். - 'செயின்ற்' (புனித) லூயிஸ், மிசூரியிலுள்ள லூயிஸ் சல்லிவன் வடிவமைத்த வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டடம். -

ngiri2704@rogers.com

நன்றி: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4380:-4-louis-sullivan-form-follows-function&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

https://vngiritharan230.blogspot.com/2018/02/4-louis-sullivan-form-follows-function.html#more

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள்: சேதனக் கட்டடக்கலை (Organic Architecture).


ஃப்ராங் லாயிட் ரைட்  -
நவீனக் கட்டடக்கலையின் கோட்பாடுகளிலொன்று சேதனக் கட்டடக்கலை (Organic Architecture). இதன் மூலவர் புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright) . இதனை , இச்சொல்லாட்சியினை், அவர் தனது சூழலுக்கு இயைந்த கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிக் குறிப்பிடுகையில் பாவித்ததன் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனை இவர் வடிவமானது அதன் செயற்பயனை அல்லது பாவனைப்பயனைத் தொடருமொன்று (form follows function) என்று நம்பிய கட்டடக்கலைஞரும் , ஃப்ராங் லாயிட் ரைட்டின் கட்டடக்கலைத்துறை வழிகாட்டியுமான கட்டடககலைஞர் லூயிஸ் சல்லிவனின் ( Louis Sullivan) கட்டக்கலைக் கருதுகோள்களின் வாயிலாக வந்தடைந்ததாக கட்டடக்கலை விமர்சகர்கள் கருதுவர். மேலும் சிலர் தோரோவின் மீ இறையியல் (Transcendentalism) சிந்தனையே இவரை அதிகம் பாதித்ததாகக் கருதுவர். ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமும், அதன் செயற்பயனும் ஒன்றென்று (form and function are one.) வாதிடுவார். வடிவம் அதன் செயற்பயனைத்தொடர்வது என்னும் கோட்பாடு அல்லது சிந்தனை நவீனக் கட்டடக்கலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடோ அத்தகையதொரு கோட்பாடே ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக் கட்டடக்கலை என்னும் கோட்பாடும்.

சேதனக் கட்டடக்கலை என்றால் என்ன?
இதனை ஒரு கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிய நவீனத்துவச் சிந்தனையெனலாம். இச்சிந்தனையான கட்டடமொன்றினை உயிர்த்தொகுதியாக உருவகித்து உயிர் வடிவங்கள் எவ்விதம் அவை அவற்றுக்குரிய உயிர்கள் வாழும் இயற்கைச் சூழலுக்கேற்ப  , சூழலுடன் இயைந்து உருவாகினவோ, சூழலுக்கு இணக்கமாக அமைந்துள்ளனவோ அவ்வாறே கட்டடமொன்றின் வடிவமும் (form) , அமைப்பும் (structure) அக்கட்டடம் அமையவுள்ள இயற்கைச்சூழலுக்கேற்பவிருப்பதுடன் , இணக்கமாகவுமிருக்க  வேண்டும் என்று எடுத்தியம்புகின்றது. ஆக, சேதனக்கட்டடக்கலையானது கட்டடம் வடிவமைக்கப்படும் வெளியினை அதன் உட்புற, வெளிப்புறங்களுடன் கலந்துவிடும் வகையில் அவற்றுடன் ஒன்றிணைக்கின்றது. இவ்விதமாக உருவாக்கப்படும் கட்டடச்சூழலினை அக்கட்டடம் உருவாகும் இயற்கைச்சூழலிலிருந்து வேறுபடுத்த முற்படாது, அச்சூழலுடன் ஒன்றாகும் வண்ணம் கலந்திருக்க வழி சமைக்கின்றது. ஃப்ராங்ல் லாயிட ரைட் வடிவமைத்த பல கட்டடங்கள் குறிப்பாக அவரது சொந்த இல்லங்கள் (ஸ்பிரிங் கிறீன், விஸ்கான்சின், அரிசோனா போன்ற இடங்களில் அமைந்துள்ள) இவ்விதமான அவரது கட்டடக்கலைச்சிந்தனைபோக்கான சேதனக் கட்டடக்கலைச் சிந்தனையினைப் பிரதிபலிப்பவை. உண்மையில் ஃப்ராங் லாயிட ரைட் கட்டடக்கலைப்பாணிகளைப்பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. ஏனென்றால் அவர் ஒவ்வொரு கட்டடமும் அது அமைந்திருக்கும் இயற்கைச்சூழலிலிருந்து இயல்பாக உருவாக, வளர வேண்டுமென்று திடமாக நம்பினார்.


ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் கட்டடங்களில் மிகவும் புகழ்பெற்ற கட்டடமாக அவரது 'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீட்டினைக் குறிப்பிடலாம். தென்மேற்குப் பென்சில்வேனியாவில், இயற்கைச்சூழலுக்கு மத்தியில் 1935இல் அமைக்கப்பட்டுள்ள வீடு அது. லிலியன் காவ்மானும் அவரது கணவரான எட்கர் காவ்மானுக்காகவும் அவர்கள் வார இறுதி நாள்களில் தங்குவதற்காக ஃப்ராங் லாயிட் ரைட்டினால் வடிமைக்கப்பட்ட அவ்வீடானது இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கட்டடடங்களிலொன்றாக, நவீனத்துவக் கட்டடக்கலையின் சிறந்த வெளிப்பாடாகக்கருதப்படுகின்றது. அத்துடன் ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமைத்த மிகச்சிறந்த கட்டமாகவும் கருதப்படுகின்றது. மலைப்பாங்கான காட்டுப் பகுதியில் நீர்வீழ்ச்சி பாயும் பாறைக்கு மேல், அவ்வியற்கைச்சுழலுடன் இயைந்து போகும் வகையில் இணக்கமாக அமைக்கப்பட்டுள்ள வீடு அது. 1963ஆம் ஆண்டிலிருந்து மேற்குப் பென்சில்வேனிய நகரினால் நூதனசாலையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தற்போது கட்டடக்கலையில் ஆர்வமுள்ள, கட்டடக்கலை கற்க விருப்பமுள்ள உயர்தரப்பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கோடைக்கால முகாம்கள் அங்கு வருடா வருடம் அங்கு நடைபெறுகின்றன. அதன் பொருட்டு அங்கு மேலும் பல இருப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் கட்டடங்களில் மிகவும் புகழ்பெற்ற கட்டடமாக அவரது 'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீட்டினைக் குறிப்பிடலாம்.

- ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் கட்டடங்களில் மிகவும் புகழ்பெற்ற கட்டடமாக அவரது 'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீட்டினைக் குறிப்பிடலாம். -

- 'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீடு-

கட்டடக்கலை வரலாற்றில் நவீனக் கட்டடக்கலைக் கோட்பாடுகளிலொன்றான சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் இக்கட்டடமும், இச்சேதனக்கட்டடக்கலைக் கோட்பாடும் முக்கியமானவை. இக்கோட்பாட்டின் மூலவரான அமெரிக்கக் கட்டடக்கலைஞர் ஃப்ராங் லாயிட ரைட் இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் மிகச்சிறந்த அமெரிக்கக் கட்டடக்கலைஞராகக் கருதப்படுகின்றார். கட்டடக்கலையில் ஆர்வமுள்ள எவரும் அமெரிக்கா செல்லும்போது தவறாமல் சென்று பார்க்க வேண்டியதொரு கட்டடம்தான் இந்த 'வீழும் நீர்' இல்லமும்.

இச்சேதனக் கட்டடக்கலையினை வெளிப்படுத்தும் வடிவமைப்புடன் அமைக்கப்பட்ட அண்மைக்காலக் கட்டடங்களிலொன்று புதி தில்லி, இந்தியாவில் அமைந்துள்ள் தாமரை ஆலயத்தினைக் ( Lotus Temple, India; Architect: Fariborz Sahba - Iranian-Canadian -) குறிப்பிடலாம். இதனை வடிமைத்தவர் ஈரானியக் கனடியக் கட்டடக்கலைஞரான Fariborz Sahba என்பவர். பெரியதொரு தாமரை மலர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டமானது அனைத்து மதப்பிரிவினரும் வந்து வணங்கும் பஹாய் இல்லமாகும் (Bahai House).

உசாத்துணைக்காகப் பாவித்த கட்டுரைகள்:
1. Organic Architecture as a Design Tool Frank Lloyd Wright's Natural Harmony by Jackie Craven
2. Examples of Organic Architecture Buildings Concept Characteristic By Jay Amrutia
3. Frank Lloyd Wright integrated architecture into nature at Fallingwater by Eleanor Gibson
4. Organic architecture From Wikipedia, the free encyclopedia
ngiri2704"rogers.com

ngiri2704@rogers.com

நன்றி: https://vngiritharan230.blogspot.com/2018/02/5-organic-architecture.html#more

'குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)


- லட்விக் மீஸ் வான் டெர் ரோ -

ஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்காவில் நவீனத்துவக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் 'லட்விக் மீஸ் வான் டெர் ரோ' (Ludwig Mies Van der Rohe).  இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர். 

கனடியர்களுக்குக் குறிப்பாகட்த் தொரோண்டோ வாசிகளுக்கு மீஸ் வான் டெர் ரோ என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நகரின் வர்த்தக மையத்தில் உயர்ந்து நிற்கும் TD  centre  (1964) 
தான். இதுபோல் அமெரிக்க வாசிகளுக்கு, குறிப்பாக நியுயார்க் வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது அவரது சீகிரம் கட்டடடம்தான் (Seagram Building 1958). இவ்விரு கட்டடங்களைப் பார்த்ததுமே இவரின் தனித்தன்மை உடனே புலப்படும்.
இவர் உருக்குச் சட்டங்கள் (Steel Frames), கண்ணாடி (Glass)  போன்ற புதிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதில் முன்னோடிகளிலொருவராக விளங்கினார். அதில் மிகுந்த தெளிவுடனிருந்ததுடன் தனது பாணியினை 'ட்தஓலும், எலும்பும்' (Skin and Bones) என்றும் அழைத்தார். தேவையற்ற கட்டட அலங்காரங்களை இவர் தவிர்த்ததுடன் , கட்டடங்களின் உள்வெளியினை (interior space)  முழுமையாக, தேவைக்கேற்ப  திரைச்சுவர்கள் (curtain walls) மூலம் பிரித்துப் பாவிக்கும் வகையில் தனது கட்டட வடிவமைப்புகளை உருவாக்கினார்.

1929இல் பார்சலோனா கண்காட்சியிலிருந்த ஜேர்மன் விளையாட்டரங்கில் பச்சைக்கண்ணாடிகளைக் கொண்டு வடிவியல் ஒழுங்கில்  பச்சைக் கண்ணாடி, பளிங்குக் கல் (marble), 'குரோம்' தூண்கள் (chrome columns), ஒனிக்ஸ் எனப்படும் ஒருவகை இரத்தினக் கல்,  இத்தாலி நாட்டில் காணப்படும் travertine என்னும் ஒருவகைக் கிறிஸ்டல் அல்லது படிகக் கல் ஆகியவற்றைப் பாவித்து அமைக்கப்பட்ட தளங்கள் (planes) ஆகியவற்றைப் பாவித்திருக்கின்றார் இவர்.


இவரது புகழ்மிக்க கட்டடமான 'சீகிரம்' கட்டடம் எளிமையானதும், பொதுவாகத் தேவையற்ற (superfluous)  மிதமிஞ்சிய அலங்காரங்களால் மறைக்கப்பட்டிருக்கும் நிலை  தவிர்க்கப்பட்டு கட்டுமான உறுப்புகள் (structural elements)  வெளியில் தெரியும் வகையில் அமைந்த வானுயரக் கட்டடங்கள் உருவாவதற்குரிய புதிய சகாப்தமொன்றினைக் கட்டடக்கலை வரலாற்றில் உருவாக்கி வைத்ததெனலாம்.

- 'சீகிரம்' கட்டடம் -
லட்விக்  மீஸ் வான் டெர் ரோ என்றதும் புகழ்பெற்ற இன்னுமொரு சொற்றொடரும் நினைவுக்கு வரும். அது குறைவே நிறைய என்னும் அர்த்தத்தைத்தரும் Less is more என்னும் சொற்றொடராகும். இச்சொற்றொடரைத்தாம் முதலில் தனது கட்டடக்கலைக் குருவான பீட்டர் பெஹ்ரென்ஸிடமிருந்து தான் கேட்டதாகக் கூறுமிவர் அவர் அதனைப்பாவித்த அர்த்தம் வேறு. தான் பாவித்த அர்த்தம் வேறென்றும் கூறுவார். தான் அவரிடம் பணி புரிந்த காலகட்டத்தில் ஒருமுறை தொழிற்சாலையொன்றின் முகப்புக்கான வடிவமைப்புகளாகப் பல வரைபடங்களைக் குருவான பீட்டர் பெஹ்ரென்ஸிடம் காட்டியபோது அவர் குறைவானதே அதிகம் என்னும் அர்த்தத்தில் அத்தொடரைப் பாவித்ததாக ஒருமுறை நினைவு கூர்ந்திருக்கின்றார். ஆனால் லட்விக்  மீஸ் வான் டெர் ரோ கட்டடமொன்றின் தேவையற்ற அலங்காரங்களை ஒதுக்கி, மிகவும் எளிமைப்படுத்தி, கண்ணாடி, உருக்கும் மற்றும் திரைச்சுவர்களைப் மற்றும் புதிய கட்டடப்பொருட்களைப் பாவித்து காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதியதொரு கட்டடக்கலைப்பாணியின் அறிமுகப்படுத்தினார். பழைய பாணிக் கட்டடக்கலையிலிருந்து அதிகமாகப்பாவிக்கப்பட்ட மிதமிஞ்சிய தேவையற்ற அலங்காரங்களையெல்லாம் குறைத்து, மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வானுயரக் கட்டடங்களை அமைத்ததைக் குறிப்பிடுதற்கே 'குறைவில் நிறைய'  (Less is more)  என்னும் சொற்றொடரினைப் பயன்படுத்தினார். 

இவர் பெயரைக்கூறும் பல வானுயரக் கட்டடங்கள் பல்வேறு நாடுகளிலுள்ளன. கட்டடங்கள் தவிர தளபாட வடிவமைப்பிலும் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

- TD  centre  (1964) -
 இவ்விதமான புதியதொரு கட்டடக்கலைப்பாணியினைக் காலத்துக்கேற்ப அறிமுகப்படுத்திய லட்விக்  மீஸ் வான் டெர் ரோ நவீனக் கட்டடக்கலையின் மூலவர்களில் முக்கியமான ஒருவர் என்னும் கூற்று மிகையானதொரு கூற்றல்ல.

ngiri2704@rogers.com
           
முகநூல் எதிர்வினைகள்:
Luthuf Ameen  உங்களது கட்டடகலை தமிழ் பதிவுகள் மிகவும் உதவியாக உள்ளது எங்களை போன்ற கட்டடகலை மாணவர்களுக்கு. மிக்க நன்றி

Giritharan Navaratnam:  நன்றி நண்பரே.தமிழில் கட்டடக்கலை, நகர அமைப்பு போன்ற விடயங்கள் பற்றிய நூல்கள், கட்டுரைகள் குறைவு. அதனால்தான் ஆரம்பத்தில் சுருக்கமாகக் கட்டடக்கலைக் குறிப்புகள் என்னும் தலைப்பில் கட்டக்கலை பற்றிய பல்வேறு விடயங்கள் பற்றித் தமிழில் எழுத வேண்டுமென்று எண்ணினேன். உங்களைப்போன்றவர்களுக்கு இவை பயனளிப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. கருத்துகளுக்கு நன்றி.

நன்றி: பதிவுகள்.காம்