Friday, September 24, 2021

கட்டடச்சூழலும் எம்மவர்களும் - 01

எது இன்பமான வாழ்க்கை என்பதில் கொள்கை ரீதியிலான வேறுபாடு மக்களிடைய இருக்கின்றது. தொடர்பாடல் தொழில்நுட்ப வருத்தியால் உலகம் முழுவதும் இன்பமான வாழ்கை என்பது பொதுவான ஒரு இலக்கை நோக்கி நகர்வதாகவே உணரக்கூடியாத இருக்கின்றது. அதாவது 50 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒருவருடைய இன்பமான வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் வேறு இன்று யாழ்ப்பாணத்தில்  இருக்கும் ஒருவருடைய இன்பமான வாழ்க்கைக்கு  தேவையான விடயங்கள் வேறு என்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதில் கட்டடச்சூழல் என்பது பாரியவில் மாற்றம் கண்டுள்ளது. முன்பு உள்ளுரில் கிடைக்கின்ற பொருட்களைக்கொண்டு காலநிலைக்கு உகந்த கட்டடங்களை அமைத்து வாழ்ந்தார்கள். ஆனால் இன்று அவ்வாறு இல்லை இதற்குப்பல உதாரணங்கள் உண்டு.

கல்வி கற்கப்பயன்படும் பாடசாலை கட்டடங்களை எடுத்துக்கொண்டால் போதிய இடவசதிகளுடன் மின்சார வசதிகள் கூட இல்லாமல் முன்பு பாடசாலைகள் இயங்கின. ஆனால் இன்று அதிபர் அறை என்பது வளி சீராக்கி இருந்தால் தான் குறித்த பாடசாலை வசதியான பாடசாலை என்ற தோற்றம் வரும் என்பதற்காவே வளிசீராக்கிகள் பொருத்தப்படுகின்றது. கட்டடங்கள் கட்ட வேண்டும் என்பதற்காக வழக்கத்தில் உள்ள நடைமுறைகளை மீறியும் பல கட்டடங்கள் கட்டப்படுகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றதுஅதாவது இரண்டு கட்டடங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய ஆக்குறைந்தளவு தூரங்களைக் கூடப் பின்பற்றாது கட்டடங்கள் மிக அருகில் கட்டப்பட்டுள்ளன. இந்தநிலையில் போதிய காற்றோட்டம் இல்லாமல் இருக்கின்றது. வெள்ள நீர் வழிந்தோட ஏற்பாடுகள் இல்லாமல் இருக்கின்றமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளமையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

 

இணுவில் மத்திய கல்லூரியின்  google map 

வீடுகளை எடுத்துக்கொண்டால்....இணைந்த குளியல் அறைகள் கொண்ட, தரைக்கு விலை உயர்ந்த தரை ஒடுகள் (floor tiles) பதித்த..... பல வசதிகள் கொண்ட மாடி வீடுகளே அதிகமான மக்களுடைய தேவையாக இருக்கின்றது......

இவ்வாறான சூழ்நிலையில் மக்களை வழிப்படுத்தும் நிலையில் நிர்வாகக்கட்டமைப்புக்களே கொள்கை வகுப்பாளர்களோ இல்லை....இதனால் சமூகத்தின் போக்கை கட்டுப்படுத்தவோ அல்லது வழிப்படுத்த முடியாத நிலையேதான் இருக்கின்றது. மக்கள் பிரச்சனைகள் தங்கள் காலுக்குள் வந்தபின்னரே உணர்ந்து கொள்வார்கள், அந்த நேரம் நிலைமை கட்டுக்குள் இருக்காது என்பது தெளிவாக உணரக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு அண்மைய உதாரணம் கொவிட் 19

கட்டடக்கலை மற்றும் நகரவடிவமைப்பு  பற்றி சில விடயங்களை அறிந்தவன் என்ற வகையில் என்னுடைய ஆதங்கம் எல்லாம் கட்டடச்சூழல் என்பது மனித செயற்பாடுகள் எல்லாவற்றுக்கும் இன்றியமையாததது என்றால்   கட்டடக்கலை மற்றும் நகரவடிவமைப்பு  துறைசார்ந்து என்ன செயற்பாடுகள் நடக்கின்றது.  அது சரியாக செய்யப்படுகின்றதா? அல்லது எதிர்கால நிலைமைகளை எதிர்கொள்ள  என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியே ஆகும்.

மரம் ஒன்று உயிர் வாழ தனக்கு தேவையான உணவை தானே தயார் செய்வதால் ஒரு  இடத்தில் நிலையாக நிற்கும் தன்மையை இயற்கையாக கொண்டிருக்கின்றது.

ஒரு கட்டடம் நிலையாக மண்ணில் உருவாக்கும் போது அது உயிருடன் வாழ்வதற்கு தேவையான சக்தியை கொண்டிருக்க வேண்டும்.  இந்த சக்தியை பெறுவதற்கு தற்போதைய கட்டட வடிவமைப்பாளர்கள் காலனித்துவ காலத்தில் எமக்குத்தரப்பட்ட ஐரோப்பிய பாணியிலான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றோம்.

 ஆனால் குடாநாட்டில் உள்ள மக்கள் சமூகப் பொருளாதார அரசியல் காரணங்களால் அனைவரும் அவ்வாறு இல்லை. குறிப்பாக சட்டடங்கள், நிர்வாக நடைமுறைகள் எல்லமே ஐரோப்பிய அல்லது சர்வதேச தரத்தில் எழுதியிருக்கும் போது நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பது யாவரும் அறிந்ததே....அதே போலவே கட்டட வடிவமைப்பு மற்றும் நிர்மாணம் சார்ந்த செயற்பாடுகளும் இருக்கின்றது. இந்த நிலையில் கட்டட வடிவமைப்பு சார்ந்த அணுகுமுறை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைய வேண்டும்.

உதாரணமாக கட்டடங்களில் ஓட்டுக்கூரைகள் பாவனையில் இருந்தன பின்னர் அஸ்பெஸ்ரேஸ் கூரைத்தகடுகள் பாவனைக்கு வந்தன அதன் பின்னர் உலோகக்கூரைகள் பாவனைக்கு வந்து விட்டனகூரைக்கான தெரிவு என்பது பொருளாதார நிலை மற்றும் சந்தைகளில் இலகுவில் கிடைக்கும் தன்மை என்பவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படும் நிலையில் குறித்த உற்பத்திப்பொருள் எமது காலநிலைக்குப் பொருத்தமானதா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை துறைசார்ந்தவர்கள் எடுத்து மக்களை அறிவூட்ட வேண்டும். ஆனால் யாழ்ப்பாணத்தில் அவ்வாறு இல்லை. எமது பிரச்சனைகள் அல்லது  தேவைகளுக்கான தீர்வை சந்தைச்சக்திகளே (வியாபாரிகளும் அவர்களுடைய முகவர்களும்) தீர்மானிக்கின்றன. ஆனால் அவை பொருத்தமான தீர்வாக இருப்பதில்லை.

மழைத்தூவலைத் தடுப்பதற்குப் பொருத்தப்பட்ட polycarbonate sheet உருமாறி தொங்குகின்றது.

எமது காலநிலைக்கு ஏற்ப கட்டட உட்புற வெப்பநிலையை கட்டுப்படுத்த வழிகள் பல இருந்தாலும் வாயுச்சீராக்கிகள் (AC) பயன்படுத்துவது தற்போது அநேக அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊக்குவிற்கப்படுகின்றது. எங்களுடைய பொருளாதார நிலைக்கு வாயுச்சீராக்கிகளைப் பயன்படுத்துவது சரியான தீர்வா என்பதை இதுவரை யாரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. நிதி, பராமரிப்பு, உதிரிப்பாகங்கள், சக்தித்தேவை, என்பன கருத்தில் கொள்ளப்படுகின்றதா?


நகர
வடிவமைப்பு மற்றும் முகாமைத்துவத்தை எடுத்துக்கொண்டால் மக்களின் வாழ்க்கை முறை அல்லது தேவை பற்றிய சரியான முடிவுகள் எடுக்கப்படாமல் செயற்திட்டங்களை வழங்கி நடைமுறைப்படுத்துவது காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு உதாரணமாக தனியார் நிதிப்பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் ஆரியகுளத்தைச் சுற்றியுள்ள பகுதியை அழகுபடுத்தும் செயற்பாட்டைக் குறிப்பிடலாம்.....மக்களுக்குத் தேவையானவற்றைத் செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உதாரணமாக நீர் மேலான்மை....திண்மக்கழிவு முகாமைத்துவம்..... 



இன்னொரு முக்கியமான செயற்பாடு யாழ்நகரில் தனியார் கல்வி நிறுவனங்களை அதிகளவில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.  அதனோடு சார்ந்த போக்குவரத்து....ஆரோக்கியமான கற்றல் சூழல்... சுகாதார நடைமுறைகள்....போன்றவற்றை மேம்படுத்துவதற்கு தனியாருடன் இணைந்து திட்டமிலாளர்கள் நகர நிர்வாகம் செயற்திட்டங்களை நடைமுறைமுறைப்படுத்த வேண்டும்.



அபிவிருத்தி திட்டம் அல்லது எமது பிரதேச அபிவிருத்தி எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடை பெரும்பாலும் தேவை உடைய மக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. திட்டமிடலில் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் தாங்களுடைய பார்வையிலேயே முடிவுகளை எடுக்கின்றனர். இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்க இருக்கும் பிரச்சனைகள் பற்றிய போதிய அறிவூட்டல் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாடசாலைச் செயற்பாடுகள் ஊடாக சவால்களை எதிர் நோக்க பயிற்றுவிக்கப் படவேண்டும். ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றது. உதாரணமாக கழிவு முகாமைத்துவத்தை எடுத்துக்கொண்டால்  ஒரு சில பாடசாலைகள் குப்பைகளை தரம் பிரித்து கொட்டுகின்றார்கள் ஆனால் அநேகமானவை அதனைப் பின்பற்றுவதில்லை. காலநிலை மாற்றமும் அதனை எதிர்கொள்ள வேண்டிய செயற்பாடுகளும் பேச்சளவிலேயே இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

நாங்கள் செய்கின்ற எல்லாச் செயற்பாடுகளும் மக்களுக்காவே என்று சொன்னால் மக்கள் தேவைகள் சரியாக இனம் காணப்படவேண்டியதும்..... அதனாடாக மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டியதும் சமூகத்தை வழிநடத்துபவர்களின் கடைமையும் பொறுப்பும் கூட.

கடட்டடக்கலைஞர்குபதீதரன்

Sunday, September 19, 2021

மக்களின் தேவையை.......காலநிலையை...... கணக்கு எடுக்காத அபிவிருத்திப் பணி

 யாழ்ப்பாணத்தில் எல்லோரும் நன்கு படித்தவர்கள்....

ஒரு காரியத்தை செய்வதில் கெட்டிக்கார்கள்.....

எல்லா நாடுகளுடனும் நேரடித்த தொடர்பு உள்ளவர்கள்....

சிறந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,

தலை சிறந்த சட்டத்தரணிகள் உள்ள சமூகம்

இப்படி பல்வேறு பெருமை  ஆனால் நடக்கின்ற சம்பவங்களை உற்று நோக்கிப் பார்த்தால், தங்களுக்குள் மனப்பிரமையை ஏற்படுத்தி  எல்லோரும் சுய திருப்த்தி அடைந்து கொள்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

வேலைத்திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றால் அது யாருக்காக செய்யப்படவுள்ளது (பயனாளிகள்) என்ன பொறுமதியில் செய்யப்படவுள்ளது எவ்வாறு செய்யப்படவுள்ளது என்ற நடைமுறையில் செய்யப்படுகின்றது. இந்த நடைமுறைகளைச் செய்வதற்கு நிறைவேற்று அதிகாரிகள், பொறியிலாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள் மற்றும் கணக்காளர்கள் எனப் பல முக்கிய ஆளணியினர் கொண்டே செய்யப்படுகின்றது. இது எல்லாம் இருந்து செய்யப்படும் ஒரு வேலைத்திட்டம் தோல்வி அடையக்கூடாது என்பதே இந்த நடைமுறைகளின் எதிர்பார்ப்பு, முக்கிய நோக்கம்.

இந்த அறிமுகத்தோடு விடயத்திற்கு வருவோம்.

யாழ்நகரில் மாநகரசபையின் பராமரிப்பில் பூங்காக்கள் இருக்கின்றது, அதில் ஒன்று சுப்பிரமணியம் பூங்கா மற்றயது பழைய பூங்கா. சங்கிலியன் பூங்காவை சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அமைக்கவுள்ளதாகவும் அறியக்கிடக்கிடக்கின்றது.






பூங்காக்கள் எல்லாமே காலனித்துவ மேற்கத்தேய நகர அமைப்புடன் தொடர்புடையது (எங்களுடைய பாரம்பரியத்தில் பொழுது போக்குகள் எல்லாமே கோவில் செயற்பாடுகளுடன் தொடர்பு பட்டவை). சுப்பிரமணியம் பூங்கா நகர சபை கட்டடத்திற்கு முன்னால் அமைந்துள்ளது. (இது ஒரு வகையில் கொழும்பு நகரசபையை பார்த்து பிரதி பண்ணியதாக இருக்கலாம் என்பது எனது ஐயம்)

பழைய பூங்கா முதலில் வெள்ளைக்கார அரச அலுவலர்களின் தங்குமிடமாக இருந்து அதற்கு பின்னர் நீண்ட காலமாக வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, ஒரு பகுதி  அண்மையில்  மக்களுக்காக மாற்றப்பட்டது. மிகுதி இன்னும் அரச அலுவலகங்களையே கொண்டிருக்கின்றது.

சுப்பிரணியம் பூங்கா பல  மில்லியன் ரூபா செலவில் பல்வேறு உதவித்திட்டங்களுடாக புனரமைக்ககப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. ஆனால் பழைய பூங்காவின் ஒரு பகுதி திருத்தி அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டதன் பின்னர் சுப்பிரமணியம் பூங்கா பொது மக்களின் பாவனை இன்றி இருக்கின்றது (கோவிட் நோய்த் தாக்கத்திற்கு முன்னரே) பழைய பூங்கா படப்பிப்பாளர்களாலும், சுற்றுலாப்பயணிகளாலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது என'பது ஒருபுறம் இருக்க  மிகக்குறைந்தளவான நகர மக்கள் பயன்படுத்தினார்கள்.



பிரதான பூங்காவின் நிலை இவ்வாறு இருக்க குருநகர் பகுதியில் உள்ள ஒரு சிறுவர் பூங்கா நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ள பகுதியில் அமைந்தாலும் சிறுவர்களின் பாவனை இல்லாமல் இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 8 வருடங்களாக இந்த சிறுவர் பூங்காவை பார்த்துக்கொண்டு வருகின்றேன் ஆனால் அது இன்னும் முழுமையாக இயங்கவில்லை. அதை இயக்குவதற்கு எந்த முயற்சியும் யாரும் எடுத்தாக வெளியில் தெரியவில்லை.



இதேவேளை, பிரதான வீதிக்கு அருகாமையில் சிறுவர்களின் பொழுது போக்கிற்காக தற்போது ஒரு விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டு வருகின்றது..


இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இதற்கருகில் தான் நகர சபையின் மீள்சுழற்சி நிலையம் பெரிய மருத மர நிழலின் கீழ் இயங்கி வருகின்றது

பிரதான
 வீதிக்கு அண்மையில் உள்ள இந்த இடம் சிறுவர்கள் விளையாடுவதற்குப் பொருத்தமானதா?

அருகில் இருக்கும் மீள்சுழற்சி நிலையம் எவ்வாறு தொடர்ந்து 
இயங்கவுள்ளது?





எந்தவித நிழலும் இல்லாமல் சிறுவர்கள் குறித்த இடத்தைப் பயன்படுத்தலாமா?

போன்ற கேள்விகளுக்கு இந்த திட்டத்துடன் சம்பந்தப்படடவர்களிடம் பதில் இருக்கின்றாதா எனக்கேட்டால்.....அநேகமாக இருக்காது ஆனால்

ஒரு பதில் கட்டாயம் இருக்கும்...வந்த காசு திரும்பிவிடும் இதனால் இதைச்செய்தோம் என்று சொல்வார்கள்.

 

இது எல்லாவற்றையும் விட யாழ் மாநகர சபையின் முக்கியமான பகுதி குருநகர், புள்ளிவிபரங்களின் படி இப்பகுதியே அதிக நெருக்கமான குடியிருப்பைக் கொண்ட பகுதியாகும். இங்கு போதிய இடவசதி இல்லை. பெரும்பாலான வீதிகளில் நான்கு சில்லு வாகனங்கள் செல்ல முடியுமா தெரிவில்லை. குடிநீர், மலக்கழிவகற்றல் பிரச்சனை இருக்கின்றது. இங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கின்றது. இந்த நிலைமையை சீராக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ மாநகர நிர்வாகம் ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுத்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இன்று வரை அந்தப் பகுதியின் நிலை மோசமாகிக்கொண்டே வருகின்றது. இது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.




யாழ் மாநகரசபையின் இன்னொரு செயற்திட்டம், ஆரிய குளப்பகுதியில் தனியார் நிதிப்பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் செயற்திட்டம்.




குறித்த செயற்திட்டத்தின் படம் பார்வைக்கு நன்றாக இருக்கின்றது. படத்தில் உள்ளவாறு யாழ் நகரின்  காலநிலை தொடர்ந்து மம்பும் மந்தாரமாக இருக்காது. ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் summer காலத்தில் சூழல் வெப்பநிலை 15 பாகை அல்ல. நிழலுக்குள் ஒதுங்குவதே எங்களுடைய தேவை.



யாழப்பாணத்தில் இன்னும் நகர வாழ்க்கை ஆரம்பிக்கவில்லை. குருநகர் பகுதியைத்தவிர அனேகமான இடங்களில் குறைந்தது 2 பரப்பு காணிக்குள் தான் வீடுகள் இருக்கு.....குழிகள் உள்ள மலசல கூடம் தான் இன்னும் பாவனையில் இருக்கு (பொது மலக்கழிவு அகற்றும் பொறிமுறை இன்னும் இல்லை) அதிகமான நகரவாசிகள் வீட்டுக்கிணற்றிலேயே தண்ணீர் எடுத்து உபயோகப்படுத்துகின்றார்கள்.  (சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் மட்டும் உண்டு)



சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்பு, இப்போதுதான் தூர்வாரப்பட்டு வருகின்றது. இருந்த குளங்கள் காணாமல் போய் இப்போது தான் தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது. நாளுக்கு நாள் நடைபெறும் கட்டுமானங்கள் எந்த வித விசேட கட்டுபாடுகளும் (யாழ்ப்பாண அபிவிருத்திக்கு தேவையான பொதீக திட்டமிடல் / Master Plan for Jaffna Development) இல்லாமல் பொதுவான நகர சபையின் வழிகாட்டலில் (UDA Regulation) மட்டும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

இது எல்லாம் தெரியாமல் யாரும் நிர்வாகத்தில், பதவிகளில் இல்லை. இதை எல்லாம் சட்டிக்காட்டுவதால் நாளை யாழ்ப்பாண திட்டமிடலில் அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஆனாலும் எழுதுவதன் நோக்கம் ஒன்றே ஒன்று மடடும் தான். நான் கற்றுக்கொண்ட விடயத்தை, என்னுடைய மனதில் தோன்றிய சிந்தனையை உங்களுடன் பகிருவது மட்டும் தான். இவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கும் ஏதாவது நோக்கங்கள் இருக்கும், அவர்கள் எல்லோரும் அந்த நோக்கத்தை அடைய முயற்சிசெய்வார்கள். நெல் விதைத்தால் நெல் அறுபடை செய்யலாம்....

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

 என்று 467 ஆவது குறளில் திருவள்ளுவர் சொன்னது.

கடட்டடக்கலைஞர்குபதீதரன்