Friday, September 24, 2021

கட்டடச்சூழலும் எம்மவர்களும் - 01

எது இன்பமான வாழ்க்கை என்பதில் கொள்கை ரீதியிலான வேறுபாடு மக்களிடைய இருக்கின்றது. தொடர்பாடல் தொழில்நுட்ப வருத்தியால் உலகம் முழுவதும் இன்பமான வாழ்கை என்பது பொதுவான ஒரு இலக்கை நோக்கி நகர்வதாகவே உணரக்கூடியாத இருக்கின்றது. அதாவது 50 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒருவருடைய இன்பமான வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் வேறு இன்று யாழ்ப்பாணத்தில்  இருக்கும் ஒருவருடைய இன்பமான வாழ்க்கைக்கு  தேவையான விடயங்கள் வேறு என்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதில் கட்டடச்சூழல் என்பது பாரியவில் மாற்றம் கண்டுள்ளது. முன்பு உள்ளுரில் கிடைக்கின்ற பொருட்களைக்கொண்டு காலநிலைக்கு உகந்த கட்டடங்களை அமைத்து வாழ்ந்தார்கள். ஆனால் இன்று அவ்வாறு இல்லை இதற்குப்பல உதாரணங்கள் உண்டு.

கல்வி கற்கப்பயன்படும் பாடசாலை கட்டடங்களை எடுத்துக்கொண்டால் போதிய இடவசதிகளுடன் மின்சார வசதிகள் கூட இல்லாமல் முன்பு பாடசாலைகள் இயங்கின. ஆனால் இன்று அதிபர் அறை என்பது வளி சீராக்கி இருந்தால் தான் குறித்த பாடசாலை வசதியான பாடசாலை என்ற தோற்றம் வரும் என்பதற்காவே வளிசீராக்கிகள் பொருத்தப்படுகின்றது. கட்டடங்கள் கட்ட வேண்டும் என்பதற்காக வழக்கத்தில் உள்ள நடைமுறைகளை மீறியும் பல கட்டடங்கள் கட்டப்படுகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கின்றதுஅதாவது இரண்டு கட்டடங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய ஆக்குறைந்தளவு தூரங்களைக் கூடப் பின்பற்றாது கட்டடங்கள் மிக அருகில் கட்டப்பட்டுள்ளன. இந்தநிலையில் போதிய காற்றோட்டம் இல்லாமல் இருக்கின்றது. வெள்ள நீர் வழிந்தோட ஏற்பாடுகள் இல்லாமல் இருக்கின்றமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளமையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

 

இணுவில் மத்திய கல்லூரியின்  google map 

வீடுகளை எடுத்துக்கொண்டால்....இணைந்த குளியல் அறைகள் கொண்ட, தரைக்கு விலை உயர்ந்த தரை ஒடுகள் (floor tiles) பதித்த..... பல வசதிகள் கொண்ட மாடி வீடுகளே அதிகமான மக்களுடைய தேவையாக இருக்கின்றது......

இவ்வாறான சூழ்நிலையில் மக்களை வழிப்படுத்தும் நிலையில் நிர்வாகக்கட்டமைப்புக்களே கொள்கை வகுப்பாளர்களோ இல்லை....இதனால் சமூகத்தின் போக்கை கட்டுப்படுத்தவோ அல்லது வழிப்படுத்த முடியாத நிலையேதான் இருக்கின்றது. மக்கள் பிரச்சனைகள் தங்கள் காலுக்குள் வந்தபின்னரே உணர்ந்து கொள்வார்கள், அந்த நேரம் நிலைமை கட்டுக்குள் இருக்காது என்பது தெளிவாக உணரக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு அண்மைய உதாரணம் கொவிட் 19

கட்டடக்கலை மற்றும் நகரவடிவமைப்பு  பற்றி சில விடயங்களை அறிந்தவன் என்ற வகையில் என்னுடைய ஆதங்கம் எல்லாம் கட்டடச்சூழல் என்பது மனித செயற்பாடுகள் எல்லாவற்றுக்கும் இன்றியமையாததது என்றால்   கட்டடக்கலை மற்றும் நகரவடிவமைப்பு  துறைசார்ந்து என்ன செயற்பாடுகள் நடக்கின்றது.  அது சரியாக செய்யப்படுகின்றதா? அல்லது எதிர்கால நிலைமைகளை எதிர்கொள்ள  என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியே ஆகும்.

மரம் ஒன்று உயிர் வாழ தனக்கு தேவையான உணவை தானே தயார் செய்வதால் ஒரு  இடத்தில் நிலையாக நிற்கும் தன்மையை இயற்கையாக கொண்டிருக்கின்றது.

ஒரு கட்டடம் நிலையாக மண்ணில் உருவாக்கும் போது அது உயிருடன் வாழ்வதற்கு தேவையான சக்தியை கொண்டிருக்க வேண்டும்.  இந்த சக்தியை பெறுவதற்கு தற்போதைய கட்டட வடிவமைப்பாளர்கள் காலனித்துவ காலத்தில் எமக்குத்தரப்பட்ட ஐரோப்பிய பாணியிலான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றோம்.

 ஆனால் குடாநாட்டில் உள்ள மக்கள் சமூகப் பொருளாதார அரசியல் காரணங்களால் அனைவரும் அவ்வாறு இல்லை. குறிப்பாக சட்டடங்கள், நிர்வாக நடைமுறைகள் எல்லமே ஐரோப்பிய அல்லது சர்வதேச தரத்தில் எழுதியிருக்கும் போது நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பது யாவரும் அறிந்ததே....அதே போலவே கட்டட வடிவமைப்பு மற்றும் நிர்மாணம் சார்ந்த செயற்பாடுகளும் இருக்கின்றது. இந்த நிலையில் கட்டட வடிவமைப்பு சார்ந்த அணுகுமுறை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைய வேண்டும்.

உதாரணமாக கட்டடங்களில் ஓட்டுக்கூரைகள் பாவனையில் இருந்தன பின்னர் அஸ்பெஸ்ரேஸ் கூரைத்தகடுகள் பாவனைக்கு வந்தன அதன் பின்னர் உலோகக்கூரைகள் பாவனைக்கு வந்து விட்டனகூரைக்கான தெரிவு என்பது பொருளாதார நிலை மற்றும் சந்தைகளில் இலகுவில் கிடைக்கும் தன்மை என்பவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படும் நிலையில் குறித்த உற்பத்திப்பொருள் எமது காலநிலைக்குப் பொருத்தமானதா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை துறைசார்ந்தவர்கள் எடுத்து மக்களை அறிவூட்ட வேண்டும். ஆனால் யாழ்ப்பாணத்தில் அவ்வாறு இல்லை. எமது பிரச்சனைகள் அல்லது  தேவைகளுக்கான தீர்வை சந்தைச்சக்திகளே (வியாபாரிகளும் அவர்களுடைய முகவர்களும்) தீர்மானிக்கின்றன. ஆனால் அவை பொருத்தமான தீர்வாக இருப்பதில்லை.

மழைத்தூவலைத் தடுப்பதற்குப் பொருத்தப்பட்ட polycarbonate sheet உருமாறி தொங்குகின்றது.

எமது காலநிலைக்கு ஏற்ப கட்டட உட்புற வெப்பநிலையை கட்டுப்படுத்த வழிகள் பல இருந்தாலும் வாயுச்சீராக்கிகள் (AC) பயன்படுத்துவது தற்போது அநேக அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊக்குவிற்கப்படுகின்றது. எங்களுடைய பொருளாதார நிலைக்கு வாயுச்சீராக்கிகளைப் பயன்படுத்துவது சரியான தீர்வா என்பதை இதுவரை யாரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை. நிதி, பராமரிப்பு, உதிரிப்பாகங்கள், சக்தித்தேவை, என்பன கருத்தில் கொள்ளப்படுகின்றதா?


நகர
வடிவமைப்பு மற்றும் முகாமைத்துவத்தை எடுத்துக்கொண்டால் மக்களின் வாழ்க்கை முறை அல்லது தேவை பற்றிய சரியான முடிவுகள் எடுக்கப்படாமல் செயற்திட்டங்களை வழங்கி நடைமுறைப்படுத்துவது காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு உதாரணமாக தனியார் நிதிப்பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் ஆரியகுளத்தைச் சுற்றியுள்ள பகுதியை அழகுபடுத்தும் செயற்பாட்டைக் குறிப்பிடலாம்.....மக்களுக்குத் தேவையானவற்றைத் செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உதாரணமாக நீர் மேலான்மை....திண்மக்கழிவு முகாமைத்துவம்..... 



இன்னொரு முக்கியமான செயற்பாடு யாழ்நகரில் தனியார் கல்வி நிறுவனங்களை அதிகளவில் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.  அதனோடு சார்ந்த போக்குவரத்து....ஆரோக்கியமான கற்றல் சூழல்... சுகாதார நடைமுறைகள்....போன்றவற்றை மேம்படுத்துவதற்கு தனியாருடன் இணைந்து திட்டமிலாளர்கள் நகர நிர்வாகம் செயற்திட்டங்களை நடைமுறைமுறைப்படுத்த வேண்டும்.



அபிவிருத்தி திட்டம் அல்லது எமது பிரதேச அபிவிருத்தி எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடை பெரும்பாலும் தேவை உடைய மக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. திட்டமிடலில் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் தாங்களுடைய பார்வையிலேயே முடிவுகளை எடுக்கின்றனர். இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்க இருக்கும் பிரச்சனைகள் பற்றிய போதிய அறிவூட்டல் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாடசாலைச் செயற்பாடுகள் ஊடாக சவால்களை எதிர் நோக்க பயிற்றுவிக்கப் படவேண்டும். ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றது. உதாரணமாக கழிவு முகாமைத்துவத்தை எடுத்துக்கொண்டால்  ஒரு சில பாடசாலைகள் குப்பைகளை தரம் பிரித்து கொட்டுகின்றார்கள் ஆனால் அநேகமானவை அதனைப் பின்பற்றுவதில்லை. காலநிலை மாற்றமும் அதனை எதிர்கொள்ள வேண்டிய செயற்பாடுகளும் பேச்சளவிலேயே இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

நாங்கள் செய்கின்ற எல்லாச் செயற்பாடுகளும் மக்களுக்காவே என்று சொன்னால் மக்கள் தேவைகள் சரியாக இனம் காணப்படவேண்டியதும்..... அதனாடாக மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டியதும் சமூகத்தை வழிநடத்துபவர்களின் கடைமையும் பொறுப்பும் கூட.

கடட்டடக்கலைஞர்குபதீதரன்

1 comment:

  1. இது ஒரு விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தும் என்பது என் எண்ணம்
    சம்பந்தப்பட்டவர்கள் கவனம் எடுத்து ஆவன செய்வார்கள் செய்யவும் வேண்டும்
    இச்சிரமத்தை நானும் என் பள்ளிக்காலத்தில் அனுபவித்தேன் நாற்றம் இல்லாத்மலசலகூடம் இன்றும் இல்லாதிருப்பது கவலை

    ReplyDelete