Sunday, September 19, 2021

மக்களின் தேவையை.......காலநிலையை...... கணக்கு எடுக்காத அபிவிருத்திப் பணி

 யாழ்ப்பாணத்தில் எல்லோரும் நன்கு படித்தவர்கள்....

ஒரு காரியத்தை செய்வதில் கெட்டிக்கார்கள்.....

எல்லா நாடுகளுடனும் நேரடித்த தொடர்பு உள்ளவர்கள்....

சிறந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,

தலை சிறந்த சட்டத்தரணிகள் உள்ள சமூகம்

இப்படி பல்வேறு பெருமை  ஆனால் நடக்கின்ற சம்பவங்களை உற்று நோக்கிப் பார்த்தால், தங்களுக்குள் மனப்பிரமையை ஏற்படுத்தி  எல்லோரும் சுய திருப்த்தி அடைந்து கொள்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

வேலைத்திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றால் அது யாருக்காக செய்யப்படவுள்ளது (பயனாளிகள்) என்ன பொறுமதியில் செய்யப்படவுள்ளது எவ்வாறு செய்யப்படவுள்ளது என்ற நடைமுறையில் செய்யப்படுகின்றது. இந்த நடைமுறைகளைச் செய்வதற்கு நிறைவேற்று அதிகாரிகள், பொறியிலாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள் மற்றும் கணக்காளர்கள் எனப் பல முக்கிய ஆளணியினர் கொண்டே செய்யப்படுகின்றது. இது எல்லாம் இருந்து செய்யப்படும் ஒரு வேலைத்திட்டம் தோல்வி அடையக்கூடாது என்பதே இந்த நடைமுறைகளின் எதிர்பார்ப்பு, முக்கிய நோக்கம்.

இந்த அறிமுகத்தோடு விடயத்திற்கு வருவோம்.

யாழ்நகரில் மாநகரசபையின் பராமரிப்பில் பூங்காக்கள் இருக்கின்றது, அதில் ஒன்று சுப்பிரமணியம் பூங்கா மற்றயது பழைய பூங்கா. சங்கிலியன் பூங்காவை சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அமைக்கவுள்ளதாகவும் அறியக்கிடக்கிடக்கின்றது.






பூங்காக்கள் எல்லாமே காலனித்துவ மேற்கத்தேய நகர அமைப்புடன் தொடர்புடையது (எங்களுடைய பாரம்பரியத்தில் பொழுது போக்குகள் எல்லாமே கோவில் செயற்பாடுகளுடன் தொடர்பு பட்டவை). சுப்பிரமணியம் பூங்கா நகர சபை கட்டடத்திற்கு முன்னால் அமைந்துள்ளது. (இது ஒரு வகையில் கொழும்பு நகரசபையை பார்த்து பிரதி பண்ணியதாக இருக்கலாம் என்பது எனது ஐயம்)

பழைய பூங்கா முதலில் வெள்ளைக்கார அரச அலுவலர்களின் தங்குமிடமாக இருந்து அதற்கு பின்னர் நீண்ட காலமாக வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, ஒரு பகுதி  அண்மையில்  மக்களுக்காக மாற்றப்பட்டது. மிகுதி இன்னும் அரச அலுவலகங்களையே கொண்டிருக்கின்றது.

சுப்பிரணியம் பூங்கா பல  மில்லியன் ரூபா செலவில் பல்வேறு உதவித்திட்டங்களுடாக புனரமைக்ககப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. ஆனால் பழைய பூங்காவின் ஒரு பகுதி திருத்தி அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டதன் பின்னர் சுப்பிரமணியம் பூங்கா பொது மக்களின் பாவனை இன்றி இருக்கின்றது (கோவிட் நோய்த் தாக்கத்திற்கு முன்னரே) பழைய பூங்கா படப்பிப்பாளர்களாலும், சுற்றுலாப்பயணிகளாலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது என'பது ஒருபுறம் இருக்க  மிகக்குறைந்தளவான நகர மக்கள் பயன்படுத்தினார்கள்.



பிரதான பூங்காவின் நிலை இவ்வாறு இருக்க குருநகர் பகுதியில் உள்ள ஒரு சிறுவர் பூங்கா நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ள பகுதியில் அமைந்தாலும் சிறுவர்களின் பாவனை இல்லாமல் இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 8 வருடங்களாக இந்த சிறுவர் பூங்காவை பார்த்துக்கொண்டு வருகின்றேன் ஆனால் அது இன்னும் முழுமையாக இயங்கவில்லை. அதை இயக்குவதற்கு எந்த முயற்சியும் யாரும் எடுத்தாக வெளியில் தெரியவில்லை.



இதேவேளை, பிரதான வீதிக்கு அருகாமையில் சிறுவர்களின் பொழுது போக்கிற்காக தற்போது ஒரு விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டு வருகின்றது..


இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இதற்கருகில் தான் நகர சபையின் மீள்சுழற்சி நிலையம் பெரிய மருத மர நிழலின் கீழ் இயங்கி வருகின்றது

பிரதான
 வீதிக்கு அண்மையில் உள்ள இந்த இடம் சிறுவர்கள் விளையாடுவதற்குப் பொருத்தமானதா?

அருகில் இருக்கும் மீள்சுழற்சி நிலையம் எவ்வாறு தொடர்ந்து 
இயங்கவுள்ளது?





எந்தவித நிழலும் இல்லாமல் சிறுவர்கள் குறித்த இடத்தைப் பயன்படுத்தலாமா?

போன்ற கேள்விகளுக்கு இந்த திட்டத்துடன் சம்பந்தப்படடவர்களிடம் பதில் இருக்கின்றாதா எனக்கேட்டால்.....அநேகமாக இருக்காது ஆனால்

ஒரு பதில் கட்டாயம் இருக்கும்...வந்த காசு திரும்பிவிடும் இதனால் இதைச்செய்தோம் என்று சொல்வார்கள்.

 

இது எல்லாவற்றையும் விட யாழ் மாநகர சபையின் முக்கியமான பகுதி குருநகர், புள்ளிவிபரங்களின் படி இப்பகுதியே அதிக நெருக்கமான குடியிருப்பைக் கொண்ட பகுதியாகும். இங்கு போதிய இடவசதி இல்லை. பெரும்பாலான வீதிகளில் நான்கு சில்லு வாகனங்கள் செல்ல முடியுமா தெரிவில்லை. குடிநீர், மலக்கழிவகற்றல் பிரச்சனை இருக்கின்றது. இங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கின்றது. இந்த நிலைமையை சீராக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ மாநகர நிர்வாகம் ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுத்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இன்று வரை அந்தப் பகுதியின் நிலை மோசமாகிக்கொண்டே வருகின்றது. இது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.




யாழ் மாநகரசபையின் இன்னொரு செயற்திட்டம், ஆரிய குளப்பகுதியில் தனியார் நிதிப்பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் செயற்திட்டம்.




குறித்த செயற்திட்டத்தின் படம் பார்வைக்கு நன்றாக இருக்கின்றது. படத்தில் உள்ளவாறு யாழ் நகரின்  காலநிலை தொடர்ந்து மம்பும் மந்தாரமாக இருக்காது. ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் summer காலத்தில் சூழல் வெப்பநிலை 15 பாகை அல்ல. நிழலுக்குள் ஒதுங்குவதே எங்களுடைய தேவை.



யாழப்பாணத்தில் இன்னும் நகர வாழ்க்கை ஆரம்பிக்கவில்லை. குருநகர் பகுதியைத்தவிர அனேகமான இடங்களில் குறைந்தது 2 பரப்பு காணிக்குள் தான் வீடுகள் இருக்கு.....குழிகள் உள்ள மலசல கூடம் தான் இன்னும் பாவனையில் இருக்கு (பொது மலக்கழிவு அகற்றும் பொறிமுறை இன்னும் இல்லை) அதிகமான நகரவாசிகள் வீட்டுக்கிணற்றிலேயே தண்ணீர் எடுத்து உபயோகப்படுத்துகின்றார்கள்.  (சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் மட்டும் உண்டு)



சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்பு, இப்போதுதான் தூர்வாரப்பட்டு வருகின்றது. இருந்த குளங்கள் காணாமல் போய் இப்போது தான் தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது. நாளுக்கு நாள் நடைபெறும் கட்டுமானங்கள் எந்த வித விசேட கட்டுபாடுகளும் (யாழ்ப்பாண அபிவிருத்திக்கு தேவையான பொதீக திட்டமிடல் / Master Plan for Jaffna Development) இல்லாமல் பொதுவான நகர சபையின் வழிகாட்டலில் (UDA Regulation) மட்டும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

இது எல்லாம் தெரியாமல் யாரும் நிர்வாகத்தில், பதவிகளில் இல்லை. இதை எல்லாம் சட்டிக்காட்டுவதால் நாளை யாழ்ப்பாண திட்டமிடலில் அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஆனாலும் எழுதுவதன் நோக்கம் ஒன்றே ஒன்று மடடும் தான். நான் கற்றுக்கொண்ட விடயத்தை, என்னுடைய மனதில் தோன்றிய சிந்தனையை உங்களுடன் பகிருவது மட்டும் தான். இவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கும் ஏதாவது நோக்கங்கள் இருக்கும், அவர்கள் எல்லோரும் அந்த நோக்கத்தை அடைய முயற்சிசெய்வார்கள். நெல் விதைத்தால் நெல் அறுபடை செய்யலாம்....

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

 என்று 467 ஆவது குறளில் திருவள்ளுவர் சொன்னது.

கடட்டடக்கலைஞர்குபதீதரன்

1 comment:

  1. வள்ளுவன் எம்மைபபற்றித் தெரியாமலா கூறினான்

    ReplyDelete