Showing posts with label வீடு அழுகுபடுத்தல். Show all posts
Showing posts with label வீடு அழுகுபடுத்தல். Show all posts

Monday, May 16, 2022

இலங்கையின் முதலாவது பெண் கட்டடக்கலைஞர் மினட் டி சில்வா (Minnette de Silva): அவரது வாழ்வும் , பணியும் பற்றியொரு நோக்கு!


 இலங்கையின் பயிற்றுவிக்கப்பட்ட முதலாவது  பெண் கட்டடக்கலைஞர் மின்னட் டி சில்வா உலகின் கவனத்துக்குள்ளாகிய முக்கியமான பெண் கட்டடக்கலைஞர். சுதந்திரமடைந்த இலங்கையின் கட்டடக்கலையின் முன்னோடியாகவும் கருதப்படுபவர்.  1948இல் முடிக்குரிய பிரித்தானிய கட்டடக்கலை நிறுவனத்தின் (Royal Institute of British Architects - RIBA)(தோழராகத் (Associate) தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய நாட்டுப் பெண் என்னும் பெருமையும் இவருக்குண்டு. உலகக் கட்டடக்கலைத் துறையில் இவரது முன்னோடிப்பங்களிப்பு 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' ('regional modernism for the tropics') என்னும் கட்டடக்கலைப்போக்கிலாகும்.


பெப்ருவரி 1, 1918இல் கண்டியில் பெளத்தச் சிங்களத் தந்தைக்கும் (ஜோர்ஜ் ஈ.டி,சில்வா), கிறித்தவ பேர்கர் தாய்க்கும் (ஆக்னெஸ் நெல்) பிறந்த கலப்பினக் குழந்தை இவர். தந்தையார் பிரபல்யமான கண்டிய  அரசியல்வாதி.  இலங்கைத் தேசியக் காங்கிரஸின் தலைவராகவும், அரசில் உடல்நலத்துறை அமைச்சராகவும்  விளங்கியவர். இவரத குடும்பத்தில் மூன்று குழந்தைகள்.  மின்னட் டி சில்வாவே கடைசிக்குழந்தை. இவரது சகோதரி அனில் டி சில்வா ஒரு கலை விமர்சகரும் , வரலாற்றாய்வாளராகவும் விளங்கியவர். சகோதரரான ஃப்ரெடெரிக் டி சில்வா வழக்கறிஞர். கண்டியின் முதல்வராகவும் விளங்கியவர். பின்னர் இலங்கைப்பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அவர் பிரான்சுக்கான இலங்கைத்தூதுவராகவும் பின்னாளில் பதவி வகித்தார்.



மின்னட் டி சில்வாவின் முக்கியமான பங்களிப்புகளாகக் கட்டடக்கலைத்துறைப்பங்களிப்பு, கட்டடக்கலை வரலாற்று ஆய்வுப்பங்களிப்பு, இதழியற் பங்களிப்பு , சமூக, அரசியற் பங்களிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இங்கிலாந்தில் புனித  மேரிக் கல்லூரியில் படிப்பை முடித்துக்கொண்டு திரும்பிய மின்னட் டி சில்வா கொழும்பில் கட்டடக்கலைத்துறையில் பயிற்சியைப்பெற முடியாததால் , பம்பாயிலுள்ள 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத் தொடர்வதற்காகச் சென்றார். ஆனால் அவர் மெட்ரிகுலேசன் சித்தியடையாததால்  அவர் ஆரம்பத்தில் பம்பாயை மையமாகக்கொண்டியங்கிய  மிஸ்ட்ரி & பெட்வர் (Mistri and Bhedwar) என்னும் நிறுவனத்தில் கலைத்துறையில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அங்கு பயிற்சி பெறுகையில் பெரின் மிஸ்ட்ரி (Perin Mistry)  மற்றும் அவரது நண்பரான மினூவுடன் (Minoo) நட்பையேற்படுத்தி கட்டடக்கலையினைப் போதிக்கும்  கல்வி நிறுவனமொன்றில் பிரத்தியேக வகுப்புகளைக் கட்டடக்கலைத்துறையிலெடுத்தார். இதன் பின்னரே 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத்தொடர்ந்தார்.

அங்கு அவர் கல்வி கற்றுக்கொண்டிருக்கையில் கலாச்சார, அரசியல் துறைகளில் ஈடுபாடுள்ள வட்டமொன்றில் இணைந்து செயலாற்றினார். அவ்வட்டத்தில் எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த், சிதார் வாத்தியக் கலைஞரான ரவிசங்கர் ஆகியோரும் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தனர். இதனால் அவர்களுடன் மினட் டி சில்வாவுக்கும் நட்பு உருவானது. அக்குழு வெளியிட்ட சஞ்சிகையான 'மார்க்' (Marg)) இதழின் , கட்டடக்கலைக்கான ஆசிரியராக மின்ட டி சில்வா பங்காற்றினார். நவீனக் கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பிரதான விடயங்களாகக்கொண்டு வெளியான இதழ் மார்க் என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்காலகட்டம் இந்தியாவின் சுதந்திரப்போராட்டம் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த காலகட்டம். மகாத்மா காந்தியின் போதனைகளால் நடத்தப்பட்ட பாத யாத்திரையொன்றினுள் கலந்துகொண்டதற்காகக் கல்வி கற்றுக்கொண்டிருந்த கல்வி நிலையத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார். பாத யாத்திரையில் கலந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்காததன் காரணமாகவே அவர் அவ்வாறு வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து , பெங்களூரில் வசித்து வந்த கட்டடக்கலைஞரும், நகரத்திட்டமிடல் வல்லுநருமான ஓட்டொ கொனிஸ்பேர்கர்  (  Otto Koenigsberger) என்பவரின் கட்டடக்கலை நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கு பணியாற்றுகையில் பீகாரில் நிறைவேற்றுவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த 'டாடா உருக்கு நகரத் திட்ட'த்துகாக முன்னுருவாக்கப்பட்ட வீடுகளுக்கான (Prefabricated house)வடிவமைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

பின்னர் இலங்கைக்குத் தற்காலிகப் பயணமொன்றின்போது சென்றிருக்கையில் , அப்போது இலங்கையின் ஆளுநராகவிருந்த ஹேர்வால்ட் ராம்ஸ்பொதமைச்  (Herwald Ramsbotham) சந்திக்கின்றார்.  அவர் இவரது கட்டடக்கலைத்துறைத் திறமையினை இனங்காண்கின்றார். இங்கிலாந்தின் கல்விக்குழுத்தலைவராகவுமிருந்த அவர் அப்பதவியைப்பாவித்து, கட்டடக்கலைச் சங்கம் மினட் டி சில்வா முடிக்குரிய பிரித்தானியக் கட்டடக்கலை நிறுவனத்தின் சிறப்புத் தேர்வினை எடுப்பதற்கு ஒழுங்கு செய்தார். உலக யுத்தத்தின் பின் திரும்பிய மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வு அது.

 

Karunaratne House

இங்கிலாந்தில் கட்டடக்கலைத்துறைத் தேர்வில் சித்தியடைந்த அவரை அரசியல்வாதியான அவரது தந்தையார் சுதந்திரமடைந்த நாட்டுக்குத் திரும்பி அதற்குப்பங்களிக்குமாறு  வலியுறுத்தினார், அதற்காகவே நாடு திரும்பிய மினட் டி சில்வா கண்டியில் தனியாகக் கட்டடக்கலைத்துறையில் இறங்குகின்றார். போதிய நிதியற்ற நிலையில் சுயமாக அவர் கட்டடக்கலைஞராகத் தன் தொழிலை ஆரம்பிக்கின்றார். அவர் வடிவமைத்த முதலாவது கட்டடம் ஒரு வீடு. கண்டியில் உருவாக்கப்பட்ட கருணாரத்தின வீடு என்றழைக்கப்பட்ட வீடுதான் அவர் முதன் முதலாகக் கட்டடக்கலைஞராக வடிவமைத்த கட்டடம் (1949). அவரது பெற்றோரின் நண்பர்களான வழக்கறிஞரான அல்ஹி, மற்றும்  லெட்டி கருணாரத்தின ஆகியோர் தமக்காக ரூபா 40,000 செலவில் வீடொன்றினை அமைத்துத்தருமாறு அவரிடம் கேட்டனர். அதற்காக அவர் வடிவமைத்த வீடான 'கருணாரத்தின வீடு' பின்னாளில் புகழ்பெற்ற அவர் வடிவமைத்த கட்டடங்களிலொன்றானது.  மலைப்பிரதேசமான கண்டியில் , தளங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் (Split -Level) அவ்விதம் முதன் முதலில் அமைக்கப்பட்ட வீடு அதுதான். அதுவும் இலங்கையின் முதலாவது பெண் கட்டடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட வீடென்ற பெருமையும் அதற்குண்டு. ஆணாதிக்கம் மிகுந்த துறையொன்றில், ஆண் பங்காளர் எவருமின்றி, காலூன்றிய கட்டடக்கலை நிறுவனம் என்னும் பெயரற்ற நிலையில் அவர் தன் தொழிலை ஆரம்பித்தபோது அத்துறை சார்ந்த சகல வர்த்தக நிறுவனங்களுக்கும் நம்பிக்கையைத்தரவில்லை. ஆனால் அவர் அவ்வீட்டினை வடிவமைத்து வெற்றிகரமாக உருவாக்கியதும்  (1951) அவர் கவனமௌம் அவர்பால் திரும்பியது. அடுத்த பத்தாண்டு காலம் அவர் புகழ்பெற்ற  கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கினார் எனலாம். இக்காலகட்டத்தில் முப்பது கட்டடங்களை அவர் வடிவமைத்ததாக அறியப்படுகின்றது.

Karunaratne House Drawings

அறுபதுகளில் அவரது கட்டடக்கலைத்துறைப்பங்களிப்பில் வீழ்ச்சி நிலவியதென்றே குறிப்பிடலாம். அதற்கு அவரது தாயாரின் மறைவும் (1962) அதனைத் தொடர்ந்து அவரடைந்த மனத்தளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்பட்ட உடல்நலச்சீர்கேடும் முக்கிய காரணங்கள். இதனைத்தொடர்ந்து அவர் அதிக காலத்தை வெளிநாட்டுப் பயணங்களில் செல்வழித்தார், இதன் விளைவா அவரால் தன் கட்டடக்கலைத்தொழிலில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடியவில்லை/ அப்பயணங்களின்போது அவர் கிரேக்கம், ஈரான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணித்தார்.  இதன் பிறகு நாடு திரும்பிய அவர் கவனம் உல்லாசப் பயணிகளுக்கான பெரிய ஹொட்டல்களை அமைப்பதில் திரும்பியது.  அவரது கட்டடக்கலை பற்றியும் , வாழ்க்கை பற்றியும்  ஃபுளோரா சாமுவல் (. Flora Samuel) எழுதிய லெ கோபுசியே: கட்டடக்கலைஞரும் பெண்ணியவாதியும் (Le Corbusier: Architect and Feminist) என்னும் நூலில் விவாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சுக் கட்டடக்கலைஞரும், நகர அமைப்பு வல்லுநருமான லெ கொபுசியே அத்துறைகளில் அன்று உலகப்புகழ்பெற்றிருந்தாரென்பதும், பஞ்சாபின் சண்டிகார் நகரை வடிவமைத்தவர் அவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மினட் டி சில்வாவின் நெருங்கிய நண்பர்களிலொருவராக விளங்கியவர் என்பதும் நோக்கத்தக்கது.

இக்காலகட்டத்தில் மினட் டி சில்வா வடிவமைத்த கட்டடங்களில் எண்ணிக்கை பதினொன்று (1960 -1974)

எழுபதுகளில் புதிதாகப் பதவியேற்ற சிறிமா பண்டாரநாயக்கவின் அரசின்மீது அதிருப்தியுற்ற மினட் டி சில்வா தன் கட்டடக்கலை நிறுவனத்தை மூடிவிட்டு இலண்டன் சென்றார். அங்கு ஃபிளாட் ஒன்றினை வாடகைக்கெடுத்து வசித்து வந்தார். அங்கு வசிக்கையில் அவரது கவனம் உலகக்கட்டடக்கலையின் வரலாறு பற்றித்திரும்பியது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கட்டடக்கலையின் வரலாறினைப் படிப்பவர்கள் பாவிக்கும் பிரதான நூல் பனிஸ்டர் ஃபிளெச்சரின் கட்டடக்கலையின் வரலாறு (Banister Fletcher's A History of Architecture) என்னும் நூலாகும்.  அந்நூலுக்கான 'தெற்காசியக் கட்டடக்கலை பற்றிய முழு அத்தியாயத்தையும் மினட் டி சில்வாவே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை எழுதியபோது இலண்டனில் வசித்த அக்காலகட்டத்தில்தான். கட்டடக்கலையின் வரலாறு பற்றிய அவரது ஆய்வுக்கட்டுரைப் பணி அவருக்கு ஹொங்ஹொங் பல்கலைகழகத்தின் கட்டடக்கலைப்பீடத்தில் ஆசியக்  கட்டடக்கலையின் வரலாறு பற்றிப் போதிக்கும் விரிவுரையாளர் பதவி அவருக்குக் கிடைக்க வழிவகுத்தது. அவர் அங்கு பணியாற்றியபோது (1975-1979) புதிய கோணத்தில் ஆசியக் கட்டடக்கலையைப் போதிக்கும் போக்கினை உருவாக்கினார். இவ்விதம் போதிப்பதில் அவரே முன்னோடியாகவும் விளங்குகின்றார்.

மீண்டும் 1979இல் நாடு திரும்பியதும் மீண்டும் தடைப்பட்டிருந்த தனது கட்டடக்கலைத் தொழிலை மீளுருவாக்கம் செய்ய முயற்சி செய்கின்றார். ஆனால் தகுதி வாய்ந்த இத்துறையில் பாண்டித்தியம் பெற்ற  பணியாளர்களைப்பெறுவதில் சிரமத்துக்குள்ளாகின்றார். இதுவே அவரது கட்டடக்கலைப் பங்களிப்பின் இறுதிக்காலகட்டமெனலாம். இக்காலகட்டத்தில் வடிவமைத்த முக்கியமான கட்டடங்கள் மூன்று, அவை: கண்டி கலை மையம் ( Kandy Arts Centre,சேகர் இல்லம் (Segar House, Ja-Ela -1991) & சிறிவர்தனா இல்லம் ( Siriwardene House, Colombo, 1992)

கண்டி கலை மையம்

கண்டி கலை மையம் பல மட்டங்களிலான கிடையான ஓட்டுக்கூரைகளையும், வாசல்களையும், திறந்த முற்றங்களையும் ,  மண்டபங்களையும், ஆடல் மற்றும் இசை அரங்கு மற்று கூட்டுவாழ்வுக்கான சுதேசிகளின் அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டடம். பொழுதுபோக்கையும் கட்டடக்கலையும் மனத்திலிருத்தி உருவாக்கப்பட்ட சிறந்த  கட்டடமே மின்ட டி சில்வாவின் கண்டிக் கலை மையம்.

இவ்விதமாக இலங்கைக் கட்டடக்கலைக்கு, உலகக் கட்டடக்கலைக்குப் பெரும்பங்காற்றியவர் மினட் டி சில்வா. கட்டடக்கலைஞரும் , நகரமைப்புத்திட்ட வல்லுநருமான  லெ கொபுசியே, நவீன ஓவியர் பிக்காசோ, எழுத்தாளர் முல்க்ராஜ்  ஆனந்த் போன்ற கலை,இலக்கிய ஆளுமைகளுடனெல்லாம் நட்பைப்பேணி  வந்தவர் மினட் டி சில்வா.

இவ்விதமாக உலகக்  கட்டிடக்கலைக்குப் பெருப் பங்காற்றிய  கட்டடக்கலைஞர்களிலொருவர் இலங்கையைச் சேர்ந்த மினட் டி சில்வா என்பதும் , அவர் 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' என்னும் கட்டடக்கலைப்பாணியை உருவாக்கிய முன்னோடியென்பதும் பெருமைப்படத்தக்கது. இவ்விதம் பெருமைக்குள்ளான மினட்  டி சில்வாவுக்கு  அவர் இறப்பதற்கு இரு வருடங்கள் முன்பு (1996) இலங்கைக் கட்டடக்கலைஞர்களுக்கான சங்கம் அவரது இலங்கைக் கட்டடக்கலைக்கான பங்களிப்புக்காகத் தங்க விருதினைப் பெறுகின்றார். ஆனால் அவர் மறைந்தபோது (1998) அவர் போதிய வருவாயற்று வருந்தினாரென்பது வருத்தத்துக்குரியது.

மினட் டி சில்வாவின் கட்டடக்கலைப்பங்களிப்பு!

1940s

Karunaratne House, Kandy (1947–51)

1950s

Jinaraja College, Gampola (1950–51)
Red Cross Hall, Kandy (1950) (Unbuilt)
Day Nursery Extension, Kandy (1950) (Unbuilt)
Pieris House I, Colombo (1952–6)
Daswani House, Kandy (1952)
House for buisnessman, Nawala (1952) (Never built)
Wickremaratna House, Colombo (1953)
Open Air Theatre for the Arts Council in Colombo, Colombo, (1953–54)[22]
C. H. Fernando House, Wellawatte (1954)[24]
Mrs. D. Wickremasinghe Flats, Colombo, (1954)
Senanayake Flats, Colombo, (1954–57)
Asoka Amarasinghe House, Kollupitiya (1954)
Dr. Chandra Amarasinghe Flats, Colombo, (1954–55)
Aluwihare Sports Pavilion, Police Park, Kandy (1955)
Bunnie Molamure House, Bolgoda, (1955)
Sri Rao House, Bangalore (1955) (Proposal)
Ivor Fernando Flats, Colombo, (1956)
V. Sachithanandam House, Colombo, (1956)
Mrs. N. De Saram House, Colombo, (1956–57)
Art Centre, Horana (1957) (Unbuilt)
Dr. Perera House, Colombo, (1957–58)
Watapuluwa Housing Scheme, Kandy (1958)
Amaduwa Game Reserve Lodges, Kandy (1958) (Proposal)
Sri Palee Open Air Theatre, University of Peradeniya, (1958–59)
Ceylon Match Factory (1958)[22]
General Habibullah Defence Academy Chief's House, India, (1958–59)
A. G. De Silva House, Cinnamon Gardens (1958–59)
Kalkudah Sea Side Resort, Kalkudah (1959)
Hikkaduwa Resr House, Hikkaduwa (1959) (Renovation)



1960s

Chandra Amarasinghe House, Colombo, (1960)
Dr. Hensman House, Ratmalana, (1960–61)
Dr. P. H. Amarasinghe House, Colombo, (1960)
Dr. Nadesan Villa, Kandy, (1960–61)
R. G. Senanayake House, (1960–61)(Unbuilt)
Keerthisinghe House, (1961)(Unbuilt)
Pieris House II, Colombo (1963)

1970s

Coomaraswamy Twin Houses, Colombo (1970)
Seneviratne House, Kandy, (1972)
Gamini Wickremasinghe Flat, Colombo, (1972)
Dr. and Mrs. PVJ Jayasekera House, Kandy, (1974)

1980s

Kandy Arts Centre, Kandy (1982–84)

1990s

Segar House, Ja-Ela (1991)
Siriwardene House, Colombo (1992)



உசாத்துணை:

 

1. நன்றி: விக்கிபீடியா ஆங்கிலப்பக்கம்

ngiri2704@rogers.com

https://www.geotamil.com/index.php/2021-02-11-18-08-43/6168--minnette-de-silva-


Tuesday, May 28, 2019

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று : கட்டடங்களும், தொழில் மயப்படுத்தலும்.

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -[-பதிவுகள் இணைய இதழின் அக்டோபர் 2008 , இதழ் 106இல் வெளியான இக்கட்டுரை இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. இக்கட்டுரை ஏற்கனவே 'தாயகம் ' சஞ்சிகையிலும் வெளிவந்திருக்கிறது. -  பதிவுகள்] இலங்கை இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை. இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும் போதாது? குறைந்த செலவிலும் கட்ட வேண்டும். இதன் காரணமாகக் 'குறைந்த செலவு வீடுகளின்' (Low Cost Housing) தேவை வளர்முகநாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகின்றது. பல்வேறு வளர்முக, அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய குறைந்த செலவுக் குடிமனைகளைக் கட்டுவதெப்படி என்பது பற்றியெல்லாம் ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுமிருக்கின்றன. இத்தகைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வீடமைப்புத் திட்டங்கள் மிகுந்த அவதானத்துடன் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை அதிக அளவு பாவிக்கக்கூடியதாக, அதே சமயம் உருவாகக் கூடிய சேதங்களின் அளவைக் குறைக்கக் கூடியதாக, மேலும் கூடிய அளவு பயனைத் தரக்கூடியதாக, கட்டடம் கட்டுவதற்குரிய கால அளவைக் குறைக்கக் கூடியதாக இத்திட்டங்கள் அமைந்திருக்க வேண்டும். வீட்டைக் கட்டுவதுடன் மட்டும் பிரச்சினை தீர்ந்து போய்விடுவதில்லை. அவற்றில் வாழப்போகும் மக்களுக்கேற்றபடி வீடுகள் அமைந்திருக்க வேண்டும். இத்தகைய வீடமைப்புத் திட்டங்களை அமைக்கும்போது அவற்றில் வாழப்போகும் மக்களின் சமூக வாழ்க்கை முறை, அவர்களின் தேவைகள், மற்றும் வீடுகள் அமையவிருக்கின்ற பிரதேசங்களின் காலநிலை, அப்பகுதிகளில் கிடைக்கக்கூடிய மூலவளங்கள் என்பன பற்றியெல்லாம் கவனத்தில் கொண்டே அத்தகைய திட்டங்களை அமைக்க வேண்டும்.
 கட்டடங்களைத் தொழில் மயப்படுத்தல்....

இவ்விதமான குறைந்த செலவு வீடுகளை எவ்விதம் அமைக்கலாம்? வீடு கட்டுவதற்கான செலவை எவ்விதம் குறைக்கலாம்? வீடமைப்புச் செலவைப் பொறுத்தவரையில் மூலப்பொருட்செலவும் தொழிலாளருக்கான செலவும் முக்கியமானவை. கட்டடங்களைத் தொழில் மயப்படுத்துவதன் மூலம் (Industrialisation of Buildings) கட்டடப் பொருட்களுக்கு அல்லது பாகங்களுக்கு (மொத்தத்தில் கட்டடங்களுக்கு) குறிப்பிட்ட அளவு முறைகளை நிர்ணயித்துத் தரப்படுத்துவதன் மூலம் பெருந்தொகையாகவும் விரைவாகவும் கட்டடப்பொருட்களை உற்பத்தி செய்யக் கூடியதாகவிருக்கும். கட்டடங்களைக் கட்டுவதும் துரிதமாகவும் இலகுவானதாகவுமிருக்கும். இவ்விதம் கட்டடங்களைத் தொழில் மயப்படுத்துவதற்கு முன்னோடியாக இன்னுமொன்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவினை அடிப்படை அளவாக நிர்ணயம் செய்து கொண்டு (Module) இந்த அளவினை அடிப்படையாக வைத்துக் கட்டடப் பொருட்களைப் பாகங்களை உற்பத்தி செய்ய வேண்டும். வீடுகளை வடிவமைக்கும் போது கூட இத்தகைய அளவு முறையில் உருவாக்கப்பட்ட பாகங்களைப் பாவிக்கக்கூடியதாகத்தான் வடிவமைக்க வேண்டும். இதனை Modular Coordination என்பார்கள். இத்தகைய முறைகளில் வீடுகளை அமைக்கும் போது பெறக்கூடிய முக்கியமான நன்மைகளிலொன்று வீட்டிற்கு வீடு அளவு முறைகள் மாறுவதால் ஏற்படக் கூடிய சிக்கல்களைப் பற்றிக் கவலைப் படத்தேவையில்லை என்பதே. பெருந்தொகையாக உற்பத்தி செய்யப்படும் கட்டடப் பொருட்களை எல்லா வகையான வீடுகளுக்கும் பாவிக்கக்கூடியதாகவிருக்கும். இத்தகைய முறையில் வீட்டின் சுவர்கள், தரை, கூரை, மற்றும் ஜன்னல்கள், கதவுகளெல்லாம் மிக விரைவாகவும், தரமாகவும், குறைந்த செலவிலும் அமைக்கப்பட முடியும். இப்பாகங்கள் கட்டடங்களைக் கட்டுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டு பாதுகாத்து வைக்கவும் முடியும்.

இந்தியா, இங்கிலாந்து, போலந்து, நோர்வே போன்ற நாடுகளில் அடிப்படை அளவாக 10cm இனை அடிப்படை அளவாக வரையறுத்துள்ளார்கள். சுவர்களை எடுத்துக் கொண்டால் 190X90X90mm என்னும் அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்களை அல்லது 390x190x190 mm என்னும் அளவில் அமைக்கப்பட்ட சுவர்ப்பாகங்களைக் கொண்டு சுவர்களை அமைக்கலாம். இது போல் கதவுகள், ஜன்னல்களுக்குப் பின்வரும் அளவுகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன:

கதவுகள்:
உயரம்: 2000 mm
அகலம்: 700 mm, 800mm, 900mm

ஜன்னல்கள்:
உயரம்: 400mm, 800mm,1200mm,1600mm
அகலம்: 400mm, 800mm,1200mm, 1600mm

இவ்வாறே கூரை, தரை போன்ற பாகங்களையெல்லாம் இலகுவாகவும், விரைவாகவும், குறைந்த செலவிலும் பயன்பாடு மிக்கதாகவும் உருவாக்கிக் கொள்ளலாம்.

அத்தியாயம் இரண்டு: பாரம்பரியக் கட்டடக்கலை

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -வளர்முக நாடுகளைப் பொறுத்த வரையில் கட்டடங்களைத் தொழில்மயப்படுத்துவதாலேற்படும் நன்மைகள் பற்றியும், இவ்விதம் தொழில் மயப்படுத்துவது எவ்விதம் வீட்டுப் பிரச்சினையைக் குறைப்பதற்கு உதவ முடியுமென்பது பற்றியும் பார்த்தோம். இனி கட்டட மூலப்பொருட்களையும், வடிவமைப்பையும் (Design) எவ்விதம் இவ்வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் கையாளலாம் என்பது பற்றிப் பார்ப்போம். முதலில் கட்டட மூலப்பொருட்களைப் பற்றிப் பார்ப்போம்.

வீடு கட்டுவதற்கான செலவில் 60%ற்கும் அதிகமான பங்கை இம்மூலப்பொருட்களே எடுப்பதால், குறைந்த செலவு வீடுகளைக் கட்டும்போது இம்மூலப் பொருட்களைத் தகுந்த முறையில், குறைத்த செலவில் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டியதன் தேவை தவிர்க்க முடியாததே. வீட்டிற்கான மூலப்பொருட் செலவுகளை எவ்விதம் குறைக்கலாம்? இதற்கான விடையின் ஒரு பகுதியினைப் பாரம்பரியக் கட்டடக்கலை (Traditional Architecure) எமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

பாரம்பரியக் கட்டடக்கலை:

எமக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத்தையே எடுத்துக் கொண்டால்... அங்கு வீடுகள் எவ்விதம் கட்டப்பட்டு வந்துள்ளன என்பதை ஆராய்ந்து பாருங்கள். பனையும் தென்னையும் ஒரு வீட்டின் அமைப்பில் எவ்விதம் ஆதிக்கம்ச் செலுத்துகின்றன என்பதை உடனே புரிந்து கொள்வீர்கள். வீட்டின் கூரைகள், உத்தரம் என்று பனை மரம் பாவிக்கப்படுகின்றது. பனையோலை , தென்னோலை கொண்டு உருவாக்கப்பட்ட கிடுகுகளால் வேயப்படுகின்றன. வீட்டு வளவின் வேலிகள் கிடுகுகளால் அமைக்கப்படுகின்றன. மண் சுவர்கள், மண் தரை என்று மண் பெரிதும் பாவிக்கப்பட்டு வந்துள்ளதையும் காண முடிகிறது. வீடுகள் கட்டும் போது மரம் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் மரச்சட்டங்கள் கொண்டு வீடுகளை அமைக்கின்றார்கள். உதாரணமாகத் தென்னிலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை இதனைத் தான் எமக்குப் புலபப்டுத்துகின்றது. அங்கு பெருமளவில் கிடைக்கும் மரங்களை வெட்டி, மரச்சட்டங்களை (Timber Frames) உருவாக்குகின்றார்கள். இவ்விதம் குறுக்கும் நெடுக்குமாகச் சிறு சிறு பிரிவுகளாக அமையப்படும் மேற்படி சட்டங்களில் மண்ணைக் குழைத்து நிரப்புவதன் மூலம் வீட்டுச் சுவர்களை அமைக்கின்றார்கள்.இத்தகைய முறையினை ஆங்கிலத்தில் Wattle and Daub என அழைப்பார்கள். இத்தகைய பாரம்பரியக் கட்டடக் கலை முறையில் வீடுகளை அமைக்கும் முறையிலிருந்து நாம் முக்கியமாக் அறிந்து கொள்வதென்ன? நமது முன்னோர்கள் வீடுகளைக் கட்டும் போது அவர்கள் தாம் வாழ்ந்த பகுதிகளிலிருந்து கிடைக்கக் கூடிய மூலப்பொருட்களைக் மிக அதிக அளவில் பாவித்தார்கள் என்பதைத் தான் அறிகின்றோம். இது எம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல உலகின் வேறு பகுதிகளில் வாழ்ந்த வாழும் மக்களுக்கும் பொருந்தும். பாரம்பரியக் கட்டடக்கலை உலகின் எப்பகுதியினைச் சேர்ந்ததாகவிருந்தாலும் பொதுவாக மேற்படி உண்மையினையே காட்டி நிற்கிறது. வளர்முக நாடுகளின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்படி உண்மை கைகொடுக்கிறது. வீடுகள் அமையவிருக்கும் பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் மூலப்பொருட்களை அதிக அளவில் பாவிக்க நாம் முயல வேண்டும். வீடுகளுக்கான மூலப் பொருட்செலவின் பெரும் பகுதியினை இவ்விதம் பாவிப்பதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம். உள்ளூர் மூலப்பொருட்களைப் பாவிக்க வேண்டுமென்பதற்காக நம் முன்னோர்கள் பாவித்த மாதிரியே நாமும் பாவிக்க வேண்டுமென்பதில்லை. நவீன விஞ்ஞானத் தொழில் நுட்பங்களைத் தகுந்த முறையில் பாவிப்பதன் மூலம் பெருமளவில் கிடைக்கக் கூடிய உள்ளூர் மூலப்பொருட்களின் தரம் (Quality), உறுதி (Strength), நீண்டகாலப் பயன்பாட்டுத் தன்மை (Durability) ஆகியவற்றையெல்லாம் அதிகரித்துப் பாவிக்கலாம். இது பற்றிப் பல்வேறு வகையான ஆய்வுகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு வகையான தொழில் நுட்பங்கள் ஏற்கனவே நடைபெற்ற இத்தகைய ஆய்வுகள் மூலம் நடைமுறையில் செயற்படுத்தப்பட்டும் வருகின்றன.

பாரம்பரிய மூலப்பொருட்கள்:

பாரம்பரிய மூலப்பொருட்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். மண், ஓலைகளிலான கிடுகு, கல், மரம், செங்கற்கள், சுட்ட களிமண்ணாலான ஓடுகள், சுண்ணாம்பு, களிமண்..இவ்விதமாகக் கூறிக்கொண்டே செல்லலாம். முதலில் மண்ணையும் கிடுகையும் எவ்விதம் தரமுயர்த்தலாமென்பது பற்றிப் பார்போம். மண்ணும் கிடுகும் நீண்ட காலப்பயன்பாடு குறைவான பொருட்கள். வளர்முகநாடுகளின் பொருளாதார நிலை காரணமாக இவற்ரின் பாவனை ஒழிந்து போகப் போவதில்லை. அரசுகள் வீடமைப்புத் திட்டங்களை அமுலாக்கும் அதே சமயம் மக்களோ மண்ணும் கிடுகுகளும் கொண்ட வீடுகளை அமைத்துக் கொண்டுதான் வருகின்றார்கள். அமைத்துக் கொண்டுதானிருக்கப் போகின்றார்கள். எனவே இவற்றின் தரத்தை உயர்த்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக மண் சுவர்களின் நீர் எதிர்ப்புத் தன்மையை (Water Proof) மண்ணெண்ணெய், அஸ்பால்ட் போன்றவற்றால் உருவான கலவையைத் தெளிப்பதன் மூலம் அதிகரிக்கலாம். மண்ணின் உறுதியை சீமெந்து போன்றவற்றை மண்ணுடன் கலந்து உறுதியாக்குவதன் மூலம் அதிகரிக்கலாம். மேலும் கிடுகுகளின் நெருப்பெதிர்க்கும் தன்மையினை கிடுகுகளை அமோனியம் பொஸ்பேட் உரத்தால் உருவான கரைசலிற்குள் தோய்த்தெடுப்பதன் மூலம் அதிகரித்துக் கொள்ளலாம். இந்தியா போன்ற நாடுகள் சிலவற்றில் ஏற்கனவே இத்தகைய முறைகள் அமுலிலுள்ளன. வள்ர்முகநாடுகள் பலவற்றில் கிடுகுகளைப் பின்னுவதென்பது இன்னும் கைத்தொழிலாகத் தானிருந்து வருகிறது. இந்தோனேசியாவில் மூங்கிலான பாய்களைப் பின்னுவதற்கு எளிய இயந்திரங்களைப் பாவிக்கின்றார்களென்பதும் குறிப்பிடத் தக்கது.

அத்தியாயம் மூன்று: மண்ணும் மனிதரும்

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -மண் வீடென்றதும் ஒருவித இளக்காரம் ஏற்பட்டு விடுகிறது. உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பாவித்து வரும் கட்டடப் பொருட்களில் முக்கியமானதும் முதன்மையானதும் இந்த மண்தான். மனித குல நாகரிக வளர்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு தப்பிப் பிழைத்து விட்ட சிறப்பு மிக்க கட்டடப் பொருள்தான் இந்த மண். இன்றும் கூட மனிதர்களால் அதன் இயல்பான நிலையிலும், உருமாறிய நிலையில் செங்கற்களாகவும் (Bricks) பாவிக்கப்பட்டு வரும் பாக்கியத்திற்குரியது இந்த மண். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட செங்கற்கள் மனிதர்களால் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே பாவிக்கபப்ட்டதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்களின் ஆதி வரலாறு இத்தகைய செங்கற்களின் பாவனையைப் பறை
சாற்றுகின்றது.

மண்ணிலிருந்து செங்கற்களை உருவாக்கும்போது இரு வகைகளில் உருவாக்குகின்றார்கள். சூளைகளில் வைத்து சுடப்பட்டு உருவாக்கப்படும் செங்கற்கள் (Burnt Bricks), சூரிய வெப்பத்தில் காய விடப்பட்டு உருவாக்கப்படும் செங்கற்கள் என அவை இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன. இவ்விதம் சூளைகளின் உதவியில்லாமல் சூரிய வெப்பத்தில் காய வைக்கப்பட்டு உருவாக்கப்படும் செங்கற்களை ஆங்கிலத்தில் Adobe Blocks என்பார்கள். இத்தகைய செங்கற்கள் 25 தொன் சதுர அடி தாங்கும் சக்தி மிக்கவை என்பதை ஆய்வுகள் மூலம் நிலைநாட்டியுள்ளார்கள். அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் 33 தொன்/சதுர அடி தாங்கும் சக்தி மிக்கவை என்பதை நிலைநாட்டியுள்ளன. உண்மையில் இத்தகைய செங்கல் கட்டட அமைப்பு கூரைகள் போன்றவற்றைத் தாங்கும் சக்தி மிக்கவை என்பதையே ஆய்வுகள் காட்டி நிற்கின்றன. அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகள் பல கூட மண்ணாலான கட்டடங்களை அமைப்பதில் பின் தங்கி நிற்கவில்லை. முதலாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்தச் சூழ்நிலை நிலவிய காலகட்டத்தில் இந்நாட்டு அரசாங்கங்களால் இத்தகைய மண்ணாலான வீடுகள் (Earth Homes) பெருமளவில் கட்டப்பட்டன. முன்பே கூறியது போல் இவ்விதம் மண்ணை வீடுகளை அமைக்கப் பாவிக்கும் பொழுது அதன் உறுதியை அதிகரிப்பதற்காக சீமெந்து , அஸ்பால்ட் போன்ற ஏனைய கட்டடப் பொருட்களைச் சேர்ப்பது வழக்கம். அஸ்பால்ட் என்றதும் தான் ஞாபகம் வருகிறது. பண்டைய 'பாபிலோனியர்கள்'  (Babylonians) மண் சுவர்களின் காலநிலைக்கெதிரான தனமையை அதிகரிப்பதற்காக அஸ்பால்ட்டுடன் மண்ணைக் கலந்து பாவித்திருக்கின்றார்கள். பாவிக்கப்படும் மண்ணின் தன்மைக்கேற்ப, அதனை உறுதிப்படுத்தும் ஊக்கியின் அளவும் மாறுபடும். உதாரணமாக அதிகளவு மணலைக் கொண்டுள்ள மண்ணுக்குக் குறைந்த அளவு ஊக்கியே தேவைப்படும். இத்தகைய செங்கற்களை உலோக அல்லது மர அச்சுகளைக் கொண்டு உருவாக்கலாம். இவ்விதம் உருவாக்கப்படும் செங்கற்கள் சுமார் ஒருமாதம் வரையில் சூரிய ஒளியில் காய வைக்கப்பட வேண்டும். காய்ந்த கற்களில் வெடிப்புகள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்பதை அவதானிக்க வேண்டும். செங்கல் உருவாக்கப்பட்ட மண்ணில் களிமண்ணின் அளவு அதிகமாக இருந்தால் வெடிப்பு ஏற்படலாம். மணல் அதிகமாகவிருந்தால் துண்டுகளாகப் பொடிந்து விடும். எனவே கலவை சரியாகவிருக்க வேண்டும். இது தவிர இன்னுமொரு முறையிலும் மண் பாவிக்கப்படுகிறது. செங்கற்கள் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே மனித சமுதாயத்திற்கு அறிமுகமான முறைதான் அது. மண்ணைக் குழைத்துப் பூசி உருவாக்கும் முறைதான் அது. ஆங்கிலத்தில் Rammed Earth என்பார்கள்.

மண்ணைப் பாவித்து மனைகளை அமைக்கும் போது இன்னும் சில விடயங்களையும் கவனிக்க வேண்டும். மேலும் மண் சுவர் முற்றாகக் காய்ந்த பின்னரே அதன் மேல் சுண்ணாம்புப் பூச்சு போன்ற பூச்சுக்களைப் பூச வேண்டும். நன்கு காய்வதற்கு முன்னர் பூசினால் அது பூச்சைப் பழுதாக்குவதோடு மட்டுமல்ல சுவரின் பயன்பாட்டுத் தன்மையினையும் ஊறுபடுத்தி விடும். இவ்விதம் உருவாக்கப்படும் மண் வீடுகளை சுண்ணாம்பு அல்லது சீமெந்துச் சாந்து கொண்டு பூசி மெழுகி விட்டால், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது மண் வீடென்பதே தெரியப் போவதில்லை. இலங்கையின் தென்பகுதிக் கிராமங்களில் முன்பே குறிப்பிட்டது போல் மரமும் மண்ணும் சேர்த்து Wattle And Daub முறையில் அமைக்கப்பட்டு, இவ்விதம் சுண்ணாம்புச் சாந்து (Lime Plaster) பூசப்பட்ட வீடுகளைக் கண்டிருக்கின்றேன். மண் வீடென்பதே தெரியாது. எழுபது எண்பது வருடங்களைக் கடந்து உறுதியாக நிற்கும் இத்தகைய வீடுகள் பலவற்றை அப்பகுதிகளில் காணலாம்.

புயல், காற்று, பூமி நடுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படும் பகுதிகளில் இத்தகைய 'அடொபி' வகைச் செங்கற்களைக் கொண்டு வீடுகளை அமைக்கும் போது மிகக் கவனம் எடுக்கப்பட வேண்டும். வீடுகளின் வடிவமைப்பு நெருக்கமாகக் கச்சிதமாக (Compact) இருக்க வேண்டும். அத்திவாரம் உருக்கினால் உறுதிப்படுத்தப்பட்ட காங்ரீட்டினால் (Reinforced Concrete) உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய செங்கற்களை வைத்துச் சுவர் அமைக்கும் போது இவற்றை இணைத்து வைப்பதற்காகப் பூசபப்டும் 'காரை'யுடன் (Mortar) உருக்குக் கம்பிகளை அல்லது உருக்கு வலைகளையும் சேர்த்துச் சுவர்களை அமைத்தால் அவை உறுதியாக இருக்கும். இவ்விதம் அமைப்பதன் மூலம் சுவர் இறுக்கமானதாகவிருக்கும். மேலும் காலநிலை மாற்றங்களால் ஏற்படவிருக்கும் சுருக்கம் (Shrinkage) வெடிப்புகள் ஆகியவற்றையும் தவிர்த்துக் கொள்ளலாம். கூரையைத் தாங்குவதற்காகச் சுவரின் மேல் அமைக்கப்படும் உத்தரங்களைக் கூட (Beams) இத்தகைய உருக்கினால் உறுதியாக்கபட்ட 'காங்ரீட்'டைப் பாவித்து உருவாக்கலாம்.

களிமண் (50%ற்குக் குறையாமல்) மணல் (30%ற்குக் குறையாமல்) கலந்து உருவாக்கப்படும் இத்தகைய 'அடொபி' வகைச் செங்கற்கள் உருவாக்கப்படும் நிலையில் 30% வரையில் ஈரத்தனமையைக் (Moisture Content) கொண்டிருக்கும். உசிதமான ஈரத்தன்மை 15%இலிருந்து 18% வரையிலாகும். வைக்கோல், புல் போன்றவற்றை மண்னுடன் கலந்து இத்தகைய செங்கற்கள் ஆக்கப்பட்ட வரலாறுண்டு. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் காணப்படும் 120 வருடங்களுக்கும் அதிகமான பழமை வாய்ந்த வீடுகளில் இத்தகைய முறையில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் பாவிக்கப்பட்டுள்ளன. இவ்விதம் வைக்கோலைக் குறிப்பிட்ட அளவுகளாகக் கத்தரித்து (4" இலிருந்து 8" வரையில்) சேர்த்து செங்கற்களை உருவாக்கும் போது அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவதற்கான நிலைமைகள் உருவாவது குறைக்கப்படுகின்றன. இவ்விதம் வைக்கோல் அல்லது காய்ந்த புல்லைச் (Dried Grass) சேர்த்துச் செங்கற்களை ஆக்கும் போது அவற்றிலிருக்கும் புற்கள் அழுகிப் போய் விடாதா என நீங்கள் கேட்கலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் காணப்படும் 120 வருடங்களுக்கும் அதிகமான பழமையான வீடுகளில் காணப்படும் இத்தகைய செங்கற்களில் காணப்படும் காய்ந்த புற்கள் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது மேலுள்ள கேள்விக்குப் பதிலாக அமைகின்றது.

இவ்விதம் 'அடொபி' வகைச் செங்கற்களைக் கைத்தொழிலாகச் செய்வது தேவையற்ற நேர விரயத்தையும், மனித உழைப்பையும் உருவாக்கும். இதனைத் தவிர்ப்பதற்கு எளிய வகையில் உருவாக்கப்படும் இயந்திரங்களைப் பாவிக்கலாம். இந்தியாவுட்பட வளர்முக, அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய இயந்திரங்களைப் பாவிக்கின்றார்கள். இவற்றில் பெரும்பாலானவை மணிக்கு 150இலிருந்து 500 வரையில் செங்கற்களை உருவாக்க வல்லவை. இந்தியாவுட்படப் பெரும்பாலான நாடுகளில் பாவிக்கப்படும் இத்தகைய இயந்திரங்களில் குறிப்பிடத்தக்கவை 'எல்சன் புளக் மாஸ்டர்' (Elson Block Master), 'சின்வராம்' (Cinvaram) ஆகியவையே. இவற்றில் 'சின்வராம்' வகை 'எல்சன் புளக் மாஸ்டரி'ன் நவீன மயப்படுத்தப்பட்ட இன்னுமொரு வடிவமே. தமிழகத்தில் காரைக் குடியில் அமைந்திருக்கும் அழகப்பா செட்டியார் பொறியியற் கல்லூரியும் இத்தகைய வகைச் செங்கற்களை உருவாக்கும் இயந்திரமொன்றினை
உருவாக்கியுள்ளது. இவற்றின் தாங்கும் சக்தி 17 - 32 kg/cm.cm)

சூரிய வெப்பத்தில் காயவிடப்பட்டு உருவாக்கப்படும் 'அடொபி' (Adobe) செங்கற்கள் எவ்விதம் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க உதவமுடியுமென்பதைப் பார்த்தோம். இம்முறை மண்ணைக் குழைத்து மனைகளை அமைக்கும் முறை (Rammed Earth Construction) எவ்விதம் உதவக் கூடுமென்பது பற்றிப் பார்ப்போம். செங்கற்களின் பாவனைக்கு முன்பிருந்தே மனிதர்களால் பாவிக்கப்பட்டு வரும் முறை என்ற பெருமை இதற்குண்டு. இத்தகைய முறையில் மனைகளை அமைப்பது பற்றியும் பல்வேறு வகையான ஆய்வுகள் நடைபெற்றுள்ளனை. நூல்கள் எழுதப்பட்டுள்ளன. 'ரால்வ் பட்டி' (Ralf Patty) என்பவர் 'Age Strength Relationship for Rammed Earth'  என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்நூலில் இவர் இத்தகைய முறையில் அமைக்கபப்டும் சுவர்களின் உறுதி, அரிப்பெதிர்க்கும் தனமை என்பன காலம் செல்லச் செல்ல அதிகரிக்கும் என்பதனை விளக்கியுள்ளார். இத்தகைய முறையில் அமைக்கப்படும் வீடுகளை எவ்விதம் மிகக் குறைந்த செலவில் அமைக்கலாமென்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியரும் பொறியியலாளருமான 'ஜோன் கிர்காம்' (John Kirham) என்பவர் பரீட்சார்த்த முயற்சியாக அமைத்த வீடொன்றின் மூலம் உலகிற்கெடுத்துக் காட்டியுள்ளார். இந்த வீடு அமெரிக்காவின் 'ஓகலகோமா' (Oklakoma) மாநிலத்தில் அமைந்துள்ள 'ஸ்டில் வாட்டர்' (Still Water) என்னுமிடத்தில் அமைக்கபப்ட்டுள்ளது. சுவர், தரை, கூரை எல்லாமே குழைத்த மண்ணைக் கொண்டு $887.80 டாலர்கள் செலவில், சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்ட இந்த வீடு போதிய பயிற்சியற்ற சாதாரணத் தொழிலாளர்களாலேயே (Unskilled Labourers) உருவாக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத் தக்கது. மண் கூரையினை உறுதிப்படுத்துவதற்காக அதனுடன் 1-5/8'' (40/8") அங்குலத் தடிப்பில் காங்ரீட் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

உறுதிப்படுத்தும் ஊக்கிகள்....

இத்தகைய முறையில் மனைகள் அமைக்கபப்டும் பொழுது நிச்சயமாக மண் உறுதியாக்கப்பட வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் பாவிக்கப்படும் மண்ணின் தன்மைக்கேற்ப அதனை உறுதியாக்கப் பாவிக்கப்படும் ஊக்கியும்(Stabilizing Agents or Stabilizing Materials) மாறுபடும். உதாரணமாக மணல் கலந்த மண்ணப் (Sandy Soil) பொறுத்தவரையில் சீமெந்து நல்லதொரு ஊக்கி. களிமண்ணைப் பொறுத்தவரையில் சுண்ணாம்பு நல்லதொரு ஊக்கி. நிலக்கரிச் சாம்பல் (Fly Ash) , மரச் சாம்பல், அஸ்பால்ட் என்று பல்வேறு வகையான ஊக்கிகள் பாவனையிலுள்ளன. வளர்முக நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தத் துறையில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக வீடுகள் அமையவுள்ள பகுதியில் காணப்படும் மண்ணை வேறெவ்விதமான வழிகளில் உறுதிப்படுத்தலாமென்பது பற்றி ஆய்வுகள் மேலும் அவர்களால் தொடரப்பட வேண்டும். சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைக் கழிவுப் பொருட்களிலிருந்து இத்தகைய ஊக்கிகளை உருவாக்க முடியுமா என்பது பற்றித் தங்களது கவனத்தை அவர்கள் திருப்ப வேண்டும். காகித, சீனித் தொழிற்சாலைகளிலிருந்து உருவாக்கப்படும் கழிவுப் பொருட்களிலிருந்து இவ்விதமான ஊக்கிகளைத் தயாரிக்கலாமென்பதை ஆய்வுகள்
ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளன.

'வடிவங்கள்' (Forms) தரும் சிக்கல்கள்...

'காங்ரீட்' கட்டங்கள் கட்டும் பொழுது சுவர்கள், தரைகள் போன்றவர்ரை அமைக்குப்போது முதலில் மரங்கள் அல்லது உலோகத்தாலான 'வடிவங்களை' அமைப்பார்கள். இதனை ஆங்கிலத்தில் Form Work என்பார்கள். வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில் சாதாரண வழக்கத்திலுள்ள 'வடிவங்கள்' மண் வீடுகளை அமைப்பதற்கு உகந்தவையல்ல. அவை பாரமானவை. நேராக ஒழுங்காக அமைப்பதில் சிரமங்களைத் தரக் கூடியவை. குறைந்த செலவு மண் வீடுகளை அமைக்கும் பொழுது அவற்றிற்குகந்த இலகுவான 'வடிவங்களை'ப் பாவிக்க வேண்டும். இத்தகைய 'வடிவங்களைப்' பற்றிய ஆய்வுகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு:

டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த விவசாய பொறி நுட்பக் கல்லூரியினால் Texas Agricultural and Mechanical College பாரங் குறைந்த ஒட்டுப் பலகையைக் (Ply Wood) கொண்டு உருவாக்கப் பட்ட வடிவங்கள். பொநுநலவாய நாடுகளின் கட்டட ஆய்வுப் பிரிவினரின் ஆஸ்திரேலியக் கிளையினரால் உருவாக்கப் பட்ட உருளைகளையும், மரக் கெளவிகளையும் (Wooden Clamps) உள்ளடக்கிய 'வடிவங்கள்'. இந்த 'வடிவங்களால்' எற்பட நன்மைகளில் முக்கியமானவை காலவிரயத்தைக் குறைத்தமை, தொழிலாளர்களின் எண்ணிக்கையினைக் குறைத்தமை என்பவையே. அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த 'கட்டட ஒப்பந்தக்கார்களான' 'டான் மக்டீல் (Dan Magdiel) மற்றும் ஜோன் மக்டீல் (John Magdiel) ஆகியோரால் உருவாக்கப் பட்ட உலோகத்திலான வடிவங்கள் (Metal Forms) இவர்களது 'உலோக வடிவங்களால்'  மண் சுவர்களைத் துரிதமாகவும், நேர்த்தியாகவும் அமைக்கலாம் என்பதை எடுத்துக் காட்டின. வழக்கமாகச் சிரமம் தரும் மூலைப்(Corner) பகுதியினைக் கூட இலகுவாக அமைக்கலாம் என்பதையும் இவை எடுத்துக் காட்டின. இத்தகைய 'வடிவங்களைப்' பற்றிய ஆய்வுகள் வளர்முகநாடுகளில் முன்னெடுக்கப்பட வேண்டும்...

அழுத்திகள் பற்றி.(Tampers).....

மண்ணைக் குழைத்து வீடுகளை அமைக்கும்போது, உதாரணமாகச் சுவரொன்றை அமைப்பதாக வைத்துக் கொண்டால், முதலில் சுவர் அமையவுள்ள பகுதியில் 'வடிவங்களை' (Forms) அமைக்க வேண்டும். அதனுள் குழைத்த ஈரப்பற்றுள்ள மண்ணைக் கொட்ட வேண்டும். இவ்விதம் கொட்டப்பட்ட மண்ணை அழுத்திகளைக் கொண்டு நன்கு குத்தி, இறுக்க வேண்டும். இவ்விதம் குத்தப்படும் குத்தின் தன்மைக்கேற்ப மண்சுவரின் உறுதியும் வேறுபடும் (பொதுவாக 93 இலிருந்து 393 இறாத்தல்கள்/சதுர அங்குலம் ). அழுத்தியின் பாரம் கூடக் கூட மண் இறுகிக் கெட்டியாவதும் விரைவாகின்றது. காலவிரயம், உழைப்பு , விரயம் ஆகியவற்றைக் குறைப்பதற்காக பல்வேறு வகையான அழுத்திகள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் விளைவுகளில் முக்கியமானதொன்று வருமாறு: காற்றைக் கொண்டு இயக்கப்படும் அழுத்தி (Air Tamper). இதன் மூலம் காலவிரயம் , தொழில் விரயம் என்பவற்றை அரைவாசியாகக் குறைக்கலாம். கைகளால் இயக்கப்படும் அழுத்திகள் தொடக்கம் மேற்கூறப்பட்ட வகியிலான அழுத்திகள் வரை பல்வேறுவிதமான அழுத்திகள் பாவனையிலுள்ளன.

இவ்விதமாக மண்ணைக் குழைத்து வீடுகளை அமைப்பதென்பது கேட்பதற்கு இலகுவாகயிருந்தபோதும் உண்மையில் குறைந்தளவு செலவில் வீடுகளை அமைக்கும்போது மேல் குறிப்பிட்டதுபோல் பல்வேறுவகைகளில் முயலவேண்டும். குறைந்த செலவில் அதேசமயம் உறுதி, நீண்டகால பயன்பாட்டுத் தன்மை என்பனவற்றையெல்லாம் அதிகரிக்கும் வகையில் முயற்சிகள் செய்ய வேண்டும். இதுவரை பாரம்பர்யக் கட்டடப்பொருட்களிலொன்றான மண்ணைப் பற்றிப் பார்த்தோம். இனி வேறு பொருட்கள் பற்றிப் பார்ப்போம்.

மண்ணைக் குழைத்து மனைகளை அமைக்கும்போது இவ்விதம் அமைக்கப்பட்ட மனைகளை எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று...அவற்றின் நீரெதிர்க்கும் தன்மையினை (Waterproofing) அதிகரிப்பது பற்றியது. இது பற்றியும் பல்வேறு வகையான ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் இவ்விதம் அமைக்கப்பட்ட வீடுகளின் சுவர்களை 1:3 என்ற விகிதத்தில் கலந்துருவாக்கப்பட்ட சீமெந்து:நீர்க் கலவையைப் பூசி, அதன் மேல் 1:15 என்ற விகிதத்தில் சீமெந்து:மணல் கலந்துருவான கலவையைப் பூசியபொழுது அவை நன்கு செயல்பட்டன. ரொடிசியாவின் தென்பகுதியில் இவ்விதம் அமைக்கப்படும் வீடுகளின் சுவர்களின் மேல் முதலில் பிட்டுமன் (Bituman) கலவையைத் தெளிக்கிறார்கள். அதன்மேல் மணலைத் தூவி பின்பு அதன்மேல் சீமெந்து நீர்க்கலவையால் பூசுகின்றார்கள். ஆபிரிக்காவின் சில பகுதிகளில் இவ்விதமான மண் வீடுகளின் சுவர்களை 1:12 என்ற விகிதத்தில் சீமெந்தும் மணலும் கலந்துருவாக்கிய கலவையில் 5% இலிருந்து 10% வரையில் சுண்ணாம்பையும் கலந்து பெறப்படும் சாந்தால் (Plaster) பூசி மெழுகுவது பயனைத் தருவதை அறிந்திருக்கின்றார்கள். அஸ்பால்ட்டை அடியாகக் கொண்ட (Asphalt-based) அலுமினியம் வர்ணத்தைப் (Paint) பாவிக்கும் போது மண் சுவருடனான பிணைப்பு நன்கு உறுதியாக இருப்பதைக் கண்டு பிடித்துள்ளார்கள். இது தவிர ஆளி விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் (Linseed oil) இவ்விதமான மண் சுவர்களை நன்கு பாதுகாப்பதை பல்வேறு நாடுகளிலிருந்தும் பெறப்பட்ட அனுபவங்களின் மூலம் அறிந்திருக்கின்றார்கள். அமெரிக்க ஆய்வுகள் மூலம் பின்வருவன அறியப்பட்டுள்ளன.

1) சுட்ட சுண்ணாம்பையும், 'Cottage Cheeseஐயும் 1:6 என்ற விகிதத்தில் கலந்து, அவற்றுடன் தகுந்த அளவு நீரைச் சேர்த்து உருவாக்கப்படும் கலவையை மண் சுவரின் உட்புறத்தே நீரெதிர்க்கும் பசையாகப் பாவிக்கலாம்.

2) ஒரு கலன் மோரையும் 4.5 இறாத்தல் வெண்சீமெந்தையும் (White Cement) கலந்து உருவாக்கப்பட்ட கலவையைப் வர்ணமாகப் (Paint)  பாவிக்கலாம்.

3) 30இறாத்தல் மாவையும், 50 கலன்கள் நீரையும் கலந்து சூடாக்கிப் பெறப்பட்ட கலவைக்கு மண்ணைத் தகுந்த அளவில் சேர்ப்பதன் மூலம் பெறப்படும் கலவையைக் கொண்டு மண் சுவர்களைப் பூசலாம்.

கேட்பதற்குச் சிரிப்பாக இருக்கிறதல்லவா? ஆனால் ஆய்வுகள் இவற்றை நிரூபித்துள்ளன. அவற்றை மறுப்பதற்கில்லை. வளர்முகநாடுகளிலும் இது போன்ற ஆய்வுகள் தொடரப்பட வேண்டும். பொருத்தமானவை பாவிக்கப்பட வேண்டும். குறைந்த செலவில் நிறைந்த பயனை அடைவதென்ற குறிக்கோளையும் ஆய்வாளர்கள் மறந்து விடக்கூடாது. அடுத்த அத்தியாயம் 'சுண்ணவெண் சாந்தும்..' சுண்ணாம்பு பற்றிக் கூறும்.

அத்தியாயம் நான்கு: சுண்ண வெண் சாந்தும்...

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -சீமெந்து கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பிருந்தே மனிதரால் பாவிக்கப்பட்டு வரும் கட்டடப்பொருட்களில் சுண்ணாம்பும் முக்கியமானது. சுண்ணாம்பும், மணலும் கலந்து உருவாக்கப்படும் கற்களை (sand-lime blocks) வீடுகளை அமைப்பதற்குப் பாவிக்கலாம். இத்தகைய கற்களைப் பல்வேறு வர்ணங்களுக்குரிய வஸ்துக்களைச் சேர்ப்பதன் மூலம் (pigments) பல்வேறு வர்ணங்களில் உருவாக்கலாம். இத்தகைய கட்டடங்களின் தாங்கும் சக்தி 200இலிருந்து 500 கிலோகிராம் /cm2 வரையிலிருக்கும். இத்தகைய சுண்ணாம்புக் கட்டிகளாளேற்படும் முக்கியமான நன்மைகள்: சீமெந்து குறைவாயிருக்குமிடங்களில் இவற்றை வீடுகளை அமைக்கப் பாவிக்கலாம். மேலும் பல்வேறு வர்ணங்களில் இவற்றை உருவாக்கக் கூடியதாகயிருப்பதால் இவற்றை வீடுகளிற்கு அழகான தோற்றத்தைக் கொடுப்பதற்குரிய கட்டடப் பொருளாகவும் பாவிக்கலாம்.

உலகம் முழுவதிலுமே பரவலாக சுண்ணாம்பு, சீமெந்து, மணல் கலந்த கலவையிலிருந்து உருவாக்கப்படும் காரை (mortar) பாவிக்கப்படுகின்றது. சுண்ணாம்புக் காரை (Lime Plastering) ஆகியன சீமெந்தை விட சிறந்து விளங்குகின்றன. தண்ணீர் உட்புகுவதைத் தடுப்பதில் சிறந்து விளங்குகின்றன. சீமெந்திலிருந்து உருவாக்கப்படும் காரை, சாந்தை விட சுண்ணாம்பிலிருந்து உருவாக்கப்படும் காரை, சாந்து ஆகியன கையாள்வதற்கு இலேசானவை (workable).

சுண்ணாம்பு இன்னொரு வழியிலும் சீமெந்தைவிட நன்மையானது. சீமெந்தைக் குடிசைக் கைத்தொழிலாக (Cottage Industry) உருவாக்க முடியாது. ஆனால் சுண்ணாம்பை அவ்விதம் உருவாக்கலாம். பல்வேறு அளவுகளில் உருவாக்கப்பட்ட சூளைகள் பல நாடுகளில் பாவ்னையிலுள்ளன. இவ்விதம் சூளையிலிருந்து உருவாக்கப்படும் சுண்ணாம்பை நீருடன் கலப்பதற்கு (slaking) உரிய இயந்திரங்களும் பாவனையிலுள்ளன.

சீமெந்துடன் ஒப்பிடும் பொழுது சுண்ணாம்பின் முக்கியமான குறைபாடு: சீமெந்து விரைவாக உறுதியடைந்து விடும். இதற்குரிய உறுதியடையும் நேரம் (setting time) சுண்ணாம்பை விடக் குறைவானது. சுண்ணாம்பையும் சீமெந்தைப் போல் விரைவாக உறுதியடையச் செய்ய முடியும். தகுந்த ஊக்கியொன்றைச் சேர்ப்பதன் மூலம். சுண்ணாம்பை உறுதியாக்குவதற்குப் பாவிக்கப்படும் பொருட்களில் முக்கியமானது 'பொசல்லோனா' (Pozzolana). இதனைக் கூட இலகுவான முறையில் குறைந்த செலவில் உருவாக்குவதற்குரிய வழிமுறைகளை பல ஆராயப்பட்டுள்ளன. கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் களிமண்ணையும் , உமியையும் கலந்து உருவாக்கப்படும் சிறு கட்டிகளை எரிப்பதன் மூலம் பெறப்படும் 'பொசல்லோனா'வைத் தகுந்த அளவில் சுண்ணாம்புடன் கலந்து பாவிக்கின்றார்கள். இவ்விதம் ஏற்கனவே உருவாக்கப்பட்ட சுண்ணாம்பு 'பொசல்லோனா'க் கலவையும், பைகளில் அடைக்கப்பட்டு இந்தியாவின் மத்திய கட்டட ஆய்வு நிலையத்தால் (Central Building Research Institute - CBRI) விற்கப்படுகின்றது. இவ்விதம் பொசல்லோனாவை உருவாக்கும் பொழுது அதற்குரிய எரிபொருளைக் கூட உமியை எரிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். கழிவாகக் கொட்டப்படும் உமியிலிருந்து எவ்விதம் பயனை அடையலாம் பார்த்தீர்களா? இவ்விதம் உமியை எரிபொருளாகப் பாவிப்பது எரிபொருட் செலவை மிச்சப்படுத்தி விடுகின்றது.

சுண்ணாம்பைச் சுண்ணாம்புக் கற்களைவிட இன்னுமொரு வழியிலும் பெறலாம். சீனித்தொழிற்சாலையில் கழிவுப் பொருளாக சுண்ணாம்புக் கலவையொன்று வெளியாகின்றது. இந்தக் கழிவுச் சுண்ணாம்புக் கலவையை உமியுடன் சேர்த்து எரிக்கும் பொழுது பெறப்படும் விளைபொருள் சிறந்த 'காரை'யாகத் (mortar) தொழிற்படுவதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. அடுத்த இதழில் 'கல்லிலே கலை வண்ணம்..'

 அத்தியாயம் ஐந்து: கல்லிலே கலை வண்ணம்...

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதரால் பாவிக்கப்பட்டு வரும் இன்னுமொரு முக்கியமான கட்டடப்பொருள் கல். கற்கோயில்கள்,  ஸ்தூபிகள் என மிகப்பழமை வாய்ந்த சரித்திரச் சின்னங்கள் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலைத்து நிற்பதைப் பார்க்கின்றோம். கல்லைப் பாவிப்பதனால் ஏற்படும் மிகப்பெரிய நன்மைகளில் இதுவுமொன்று. நீண்டகாலம் நிலைத்து நிற்கக் கூடியது. ஆனால் இன்னுமொன்றையும் நீங்கள் அவதானித்துக் கொள்ளலாம். கற்களால் ஆன கட்டடங்கள் பாரம் கூடியவை மட்டுமல்ல, அதிக அளவு இடத்தையும் அடைத்துக் கொள்ளக் கூடியவை. சாதாரணமாகக் கிடைக்கும் பொளியப்படாத கற்களைக் கொண்டு (Random Rubble) அமைக்கபப்டும் சுவர்களை 38cmக்கும் குறைவான தடிப்பில் அமைப்பதென்பது வெகு அபூர்வம். அது மட்டுமல்ல கற்களைக் கொண்டு கட்டடங்களை அமைக்கும் போது ஏற்படும் நேர விரயமும் மிகவும் அதிகம். மேலும் கற்கட்டடங்களின் உறுதி பாவிக்கபப்டும் 'காரை'யின் தரத்திலும், தொழிலாளியின் திறமையிலும் தங்கியிருப்பதால் அமைப்பதற்கான செலவும் அதிகம். கற்கட்டங்கள் நெருப்பெதிர்க்கும் தன்மையில் சிறந்து விளங்குபவை. ஆனால் நீரெதிர்க்கும் தன்மையில் சிறந்தவையல்ல. ஒலியெதிர்க்கும் தன்மையில் சிறந்தவை. ஆனால் வெப்பத்தைத் தடுப்பதில் சிறந்தவையல்ல. தாங்கும் சக்தி மிக்கவை. இழுவை விசைகளைப் பொறுத்தவரையில் வலிமை குன்றியவை. இத்தகைய காரணங்களினால் வளர்முக நாடுகளின் குறைந்த செலவு மனைகளைப் பொறுத்தவரையில் கல் உகந்ததொரு கட்டடப் பொருளல்ல. மனிதரால் முடியாததென்று ஏதாவதுண்டா? கல்லை எப்படித் தகுந்த முறையில் , குறைந்த செலவில் கட்டடப் பொருளாக உருமாற்றலாம் என்பதற்கான ஆய்வுகள் தொடராமலுமில்லை. இந்திய மத்தியக் கட்டட ஆய்வு நிலையத்தினால் ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி செங்கற்களை உருவாக்குவது போல், உலோக அல்லது மர அச்சுக்களில் கற்களையும் 'காங்ரீ'ட்டையும் கலந்து 20cm X 30cm X 15 cm என்ற அளவில் கற்கட்டிகள் (Stone Blocks) உற்பத்தி செய்யப்படுகின்றன. 18kg பாரமான இவ்வகையான கட்டிகளொவ்வொன்றும் 75.90kg/sq.cm அளவுக்குத் தாங்கும் சக்தி மிக்கவை. இத்தகைய கட்டிகளைக் கொண்டு இரண்டு மாடிக் கட்டடங்கள் வரையில் விரைவாக அமைக்கலாம். வழக்கமான கற்கட்டடங்களை விட இவ்வகையான கட்டடங்களில் இடம் (space) பெரிதும் சேமிக்கப்படுகின்றது. இந்திய மாநிலங்களான இராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களில் இம்முறை வெற்றிகரமாகக் கையாளப்படுகின்றது. அம்மாநிலக் கட்டடத்திணைக்களங்களினால் இம் முறை ஏற்றுக் கொள்ளப்பட்டுமிருக்கின்றது. மண்ணைப் போல் கல்லும் பெருமளவு கிடைப்பதால் கல்லைக் குறைந்த செலவுக் கட்டடப்பொருளாக மாற்றலாமா என்பது பற்றிய முயற்சிகள் இந்திய மாநிலங்களின் முன் மாதிரியைக் கொண்டு தொடரப்பட வேண்டும்.

பாரம்பரியக் கட்டடப் பொருட்களின் முக்கியம்!

இதுவரை பாரம்பரியக் கட்டடப் பொருட்களான மண், சுண்ணாம்பு, கல் என்பவை பற்றிப் பார்த்தோம். இத்தகைய கட்டடப்பொருட்கள் பெருமளவில் கிடைப்பதால் குறைந்த செலவு வீடுகளை அமைப்பதில் இவற்றின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. கட்டடச் செலவின் முக்கியமான பெருமப்குதிச் செலவைக் கட்டடப்பொருட்களே எடுப்பதால் வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில் எதிர்கொள்ளப்படும் முக்கியமான பிரச்சனைகளிலொன்று கட்டடப் பொருட்களைக் குறைந்த செலவில் பெறுவது எப்படி என்பதுதான். பாரம்பரியக் கட்டடப்பொருட்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. இவ்விதம் அதிகமாகக் கிடைக்கும் இத்தகைய கட்டடப்பொருட்களைத் தகுந்த முறையில் உருமாற்றுவதன் மூலம் தரம் மிக்க, உறுதி மிக்க கட்டடப்பொருட்களாகக் குறைந்த செலவில் மாற்ற முடியும். சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைக் கழிவுகளைக் கூடக் கட்டடப்பொருட்களை உருவாக்குவதற்குப் பாவிக்க முடியும். இவ்விதம் பாவிப்பதன் மூலம் கட்டடப் பொருட்களை உருவாக்குவது, சூழலைச் சுத்திகரிப்பது என்னும் இருவிதப் பயன்களை அடைய முடியும்.

பெரும்பாலான வளர்முக நாடுகளில் போர்களினாலும், வறுமையினாலும் மக்களின் வாழ்வு சீரழிந்து கிடக்கின்றது. போதிய இருப்பிட வசதியற்று, அகதிகளாக, நாடோடிகளாக மக்கள் அலைந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய மக்களுக்கு நிவாரணமளிப்பதற்குக் குறைந்த செலவு வீடுகளின் தேவை மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது. வளர்முக நாடுகளின் அரசுகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை வீட்டுப் பிரச்சனைதான். எனவே தான் இத்துறையில் போதிய ஆய்வுகள் தொடரப்படுவதன் தேவை மிகவும் முக்கியம். பாரம்பரியக் கட்டடப்பொருட்களைத் தகுந்த வகையில் உருமாற்றிப் பாவிப்பதென்பது இந்தப் பிரச்சனையின் தீர்வுக்கான முதற்படிதான்.

ngiri2704@rogers.com

Thursday, June 29, 2017

”அம்பலம்”

Image may contain: sky, tree, cloud, plant, outdoor and nature

”அம்பலம்” என்பது, பொது மக்கள் கூடும் திறந்த வெளி தங்குமிடம்; அல்லது மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசியம் வெளியாதல் ஆகும்.
முற்காலத்தில் கால் நடையாகவும், வண்டிகளிலும் நீண்ட பயணம் செய்பவர்கள் பகலிலும், இரவிலும் தங்கிச் செல்வதற்கு தெரு வோரங்களில் தெரிந்தெடுத்த இடங்களில் கட்டப்பட்ட தங்குமிடங்கள் ”அம்பலம்” எனப்படும்.
இந்த நிலையில், இலங்கையின் வடக்கிலும், தென்னிலங்கையிலும், ஏனைய பகுதிகளிலும் பண்டைக் காலத்தில் அம்பலங்கள் கட்டப்பட்டிருந்தன.
தென்னிலங்கையின் சிங்கள சந்தேசய பாட்டுக்களில் (தூதுப் பிரபந்தங்களில்) அம்பலங்கள் பற்றியும், அவற்றில் இரவில் தங்குவோரிடையில் நடைபெறும் சம்பாஷனைகள் பற்றியும் அழகாகக்கூறப்பட்டுள்ளது.
வடக்கில் அம்பலங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.
வடக்கில் அம்பலங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தன, அவை எவ்வெக்காலங்களில் எப்படிக் கட்டப்பட்டிருந்தன என்பதை ஆராய்ந்து கட்டுரைகளும், நூல்களும் எழுதப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை!!

எனக்குத் தெரிந்த வரையில், யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை பிரதான வீதியும், மானிப்பாய் - கைதடி தெருவும் எனது கிராமமான உடுவிலில் ஒன்றையொன்று வெட்டுமிடத்தின் வட மேற்கு மூலையில், பண்டைய காலத்தில் கட்டப்பட்ட அம்பலம் ஒன்று இருந்தது.

இதனை “மருதனார் மடம்” என்பர்!
இதற்கு அருகாமையில் தண்ணீர் கேணி, கல்லினால் செய்யப்பட்ட நீர் தாங்கிகள், பெரு மரங்கள் எல்லாம்இருந்தன.
இந்த நீர் தாங்கிகள் மாடுகள் தண்ணீர் குடிக்கவும், மனிதரின் பாவனைக்கும் செய்யப்பட்டிருந்தன.

தென்னிலங்கைக்கு மாட்டு வண்டிகளில் செல்வோர்கள் இந்த மடத்தினில் கூடியே பின்னர் ஒருமித்து செல்வதாகவும், தெற்கிலிருந்து வரும்போது பிரிந்து செல்வதாகவும் கூறப்பட்டது.

பிற்காலத்தில் பஸ் வண்டிகள் ஓட ஆரம்பித்த காலத்தில், இந்தச் சந்தியில் இறங்குவோர்கள் ”மருதனார் மடச் சந்தி” யில் இறங்குவதாகக் குறிப்பிட்டு, இந்தச் சந்தி ”மருதனார் மடச் சந்தி ” எனப் புகழ் பெற்றது.
ஆனால், மருதனார் ம்டம் பற்றித் தெரியாதவர்கள் இப்போது ஒரு பெரும் பகுதியை மருதனார் மடம் பகுதி என்கின்றனர்!!
சந்தியிலிருந்து அரைக் கிலோ மீற்றர் தூரத்திற்கு தெருவினால் செல்லும் இடங்களை எல்லாம் Road Development Authority ஆனது ”முருதனார் மடம் என எழுதியிருப்பதை அவதானிக்கலாம்.

ஒரு விடயத்தினைச் செய்யும்போது ஆராய்ச்து சரியாகச் செய்யவேண்டும் என்பது பற்றி இன்று எவரும் கவலைப் படுவதில்லைத்தானே?
அதிலும் தமிழர்கள் பெரும் மோசமானவர்கள் என்பதும் தெரியும்தானே?
இந்த மருதனார்மடமானது இன்றும் உள்ளது.

ஆனால், அதன் தெருவோரமாக இருந்த காணிப் பகுதியை, முன்னர் அப்பகுதிக்கு AGA ஆக இருந்த ஒருவர், உள்ளுராட்சி சபையில் அங்கத்தவர் ஆக இருந்த இணுவிலைச் சேர்ந்த ஒருவரும், வேறு சிலரும் கள்ள உறுதிகளை முடித்து, தமதாக்கியது மாத்திரமன்றி, அவ்விடங்களில் கடைகளையும்கட்டியுள்ளனர்!
எது விதத்திலும், மடத்தின் பழைய கட்டிடம்மிகவும் அண்மைக் காலம்வரை இருந்தே வந்தது, இன்றும் அதன் சிதைவுகள் உள்ளன!

இதைவிட, இச்சந்தியின் வடகிழக்கு மூலையில் காணிகளை வாங்கி இந்துப் பெண்களுக்கான பள்ளிக்கூடத்தினை கட்டிய சேர். பொன்னம்பலம் இராமநாதன் என்பவர், சந்தியின் வடகிழக்கு மூலைப் பகுதியில் இருந்து கேணி, கல் நீர் தாங்கிகள் என்பவைகளை உள்ளடக்கி பாடசாலை மதில் சுவரைக் கட்டிவிட்டார்.
இது உடுவில் கிராமத்தவர்களுக்கும். ஏனையோருக்கும் இராமநாதனுடன் முரண்பாடுகளை உருவாக்கி, கல்லடி வேலன் இராமநாதனின் இந்தச் செய்கையைக் கண்டித்துக் கண்டனப் பாட்டுக்களும் பாடியிருந்தார்.

அந்தப் பாட்டுக்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்தன.
ஆனால், இராமநாதனின் இந்தச் செய்கையை மக்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏன் எனில் அவருக்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும்செல்வாக்கு இருந்தது.
இராமநாதன் உண்மையில் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மானிப்பாயில் திருமணம் செய்து உருவான வழித் தோன்ற்லாகும்!
இதனால், அவர் உடுவில் கிராமத்தவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளவில்லை. தனது குறிக்கோளை அடைவதில்தான் கண்ணாக இருந்தார்!

உடுவில் கிராமத்தவர்களுக்கான சுடலையானது மருதனார் மடச் சந்திக்கு அருகில் இணுவில் கிராமத்தில் இப்போது அமைந்துள்ள அனுமன் கோயிலுக்கு மேற்குப் புறமாக (பின் புறமாக) அமைந்திருந்தது.
இதனை அன்று ”சின்னாலங்கண்டடிச் சுடலை” என அழைத்தனர்.
இங்கு இறந்தவர்களின் உடல்களை எரிப்பது, தான் கட்டும் பெண்கள் கல்லூரியின் மாணவிகளுக்கு பயத்தை உண்டு பண்ணும் எனக் கூறி, அந்தக் காணியை அரசிடம் இருந்து தான் வாங்கிவிட்டு, இராமநாதன் உடுவில் மக்களுக்கான சுடலையை இணுவில் ரயில் நிலையத்திலிருந்து 1 கி. மீற்றர் தொலைவில் இருக்கும் வயல் பகுதியில் அமைத்துக் கொடுத்தார். இதற்கு பிரித்தானிய அரசு ஒத்துழைப்பினை வழங்கி இருந்தது.
இந்தச் சுடலையை ”பூவோடை சுடலை" என்பர்! இந்தச் சுடலையானது உடுவில் கிராமத்தவர்களுக்கான சுடலையாகும்.

இதனால், உடுவில் கிராமத்து மக்கள், 3- 6 கிலோமீற்றர்கள் இறந்த உடலை வெயில், மழைகளில் காவிச் சென்றே இன்றும் எரிக்கவேண்டிய கட்டாயம் இருந்துவருகிறது!
இதனால், உடுவில் கிராம மக்கள் இன்றும் சேர் பொன்னம்பலம் இராமநாதனைத் திட்டுவதூடாக அவர் நினைவு கூரப்படுகிறார்!!
யாழ்ப் பாணப்பகுதியின் அம்பலங்களின் நிலை”மருதனார் மடம்” போன்றதாகத்தான் பெரும்பாலும் இருக்கமுடியும்.

ஆனால், தென்னிலங்கையில் நிலைமை சற்று வேறுபட்டதாகக் காணப்படுகிறது.
நண்பர்களே!
தென்னிலங்கையின் PANAVITIYA AMBALAMA என்ற மரத்தால் கட்டப்பட்ட அம்பலம் பற்றிய ஒரு கட்டுரை கீழே தரப்பட்டுள்ளது.

படித்துப் பாருங்கள்!! - 
Vettivelu Thanam 

THE WOODEN WONDER OF PANAVITIYA AMBALAMA
25 June, 2017
Text and pix: Mahil Wijesinghe
Ambalama’ is a Sinhala word for a wayside rest-house. I first saw one when I was trekking to Sri Pada, (Adam’s Peak) with my grandmother in the latter part of the 1970s. I saw several buildings along the trek up to the peak where weary pilgrims stop over to take a respite from their long journey.
Back in those days, pilgrimages and carter’s travels lasted weeks or even months. These long journeys were often by foot or by cart. Each carried his or her provisions and stopped for rest at Ambalamas constructed and designed as architecturally simple buildings for providing shelter to weary travellers, free of charge. It was also a place where travellers can rest, eat, wash and possibly stay overnight.
Village Council

Ambalama is closely linked with Sri Lankan culture and embedded in their day to day-life. One of the brilliant scholars in Sri Lanka, Ananda Coomaraswamy, in his Medieval Sinhalese Art (1908) writes “the Ambalama served not only as a halting place for strangers, but was generally resorted to for exchange of news and a quiet chew.”

Coomaraswamy further pointed out that it served as a meeting place for the Village Council (Gam-sabawa), and was intimately associated with life in the village community. There were many of these Ambalamas at no great distance apart on frequent paths, says Coomaraswamy. There were better ones in each village, erected by the villagers, or by a rich person or even a woman, anxious to perform a meritorious act.

In addition, references to the wayside rests are found in ancient local texts as well as in the chronicles of British writer, traveller and prisoner of Kandyan Kings, Robert Knox. Ambalamas are also mentioned in local Sinhala folklore.

Travel itself has rapidly changed over time, and today, Ambalamas still stand along the highways reminding us of the days gone by. Recently, we had an opportunity to see one such astonishing Ambalama in the Kurunegala District. It is the Panavitiya Ambalama, situated in a sleepy village close to Matiyagane near Narammala in the Kurunegala District.
After a comfortable drive down the Negombo-Kurunegala highway, before reaching Narammala town, we turned to the left, to the road that led to the Metiyagane school junction. From there we turned left, proceeded another two and a half kilometers on the wooded Dangalla Road and reached the Ambalama, located on the right side in an archaeological reserve flat land adjoining the Lankathilakarama Viharaya at the border of a stretch of coconut land, surrounded by lush green paddy fields. On our way to the Ambalama, we asked directions several times from villagers as it is quite difficult to find your way if you are a first time visitor.

Wayside shelter
As we stopped the vehicle alongside the road opposite the Ambalama and peered out at the wooden structure standing in a cleared flat land bordering a stretch of coconut cultivation, we were disappointed. In fact, for a minute we wondered if we had come to the correct place. From where we stood we could see nothing of the wood carvings that this Ambalama was famous for.
But, it didn’t take long for us to discover its wealth of wooden wonder. As we entered the Ambalama, carvings seemed to overwhelm us, covering almost every available space. The carvings are a unique combinations of art themes.
According to historical notes, the Panavitiya Ambalama was built in the 18th century and it is believed that it may have stood as a wayside shelter for travellers on the ancient footpath leading from Dambadeniya to Kurunegala and Yapahuwa. It is constructed on a wooden platform on four rounded large stones, one foot in height raised from ground level to prevent damage from termite attacks. The roof is supported by 28 wooden pillars of which nine inner wooden pillars, six inches in height, display ornate carvings and motifs. The nineteen pillars that formed the outer posts were less elaborately carved.
One of the striking features of the Panavitiya Ambalama is a wooden pillar with a carving of entwined cobra hoods. This kind of wood carving is rare in Sri Lanka.

The Ambalama is famed for many finely carved pillars depicting majestic birds. Each pillar has its own individual carving. Besides the wildlife carvings, some pillars are carved with wrestling men, dancing women, musicians, acrobats, persons greeting each other, persons chanting, etc.
The Ambalama itself is the finest living example of Sri Lankan architecture and art showcased in wood. Almost every inch of the wooden structures is decorated with elaborate, intricate carvings on rafters and beam columns. Some of these wooden pillars have been renovated by the Department of Archaeology.
The value of the Panavitiya Ambalama lies in its elaborate carpentry work of beams and pillars. When I entered the Ambalama and observed the carvings, it reminded me of my visit to the Embekke Devale several months ago. Some of the Ambalama’s carvings bear resemblance to the ones at Embekke Devale at Davlagala in Kandy. Having observed the antiquity of the structure, we noticed that it has been repaired and reconstructed over the years. We understood that some of the wooden beams have been replaced in some places.

Walking around the site we found fragments of the small Kandyan Peti-ulu tiles at the site indicating that originally the roof was tiled with Peti-ulu. The Department of Archaeology has renovated and restored the roof, replacing it with modern tiles.
Magical place

Visiting this enchanting Ambalama, present day visitors can get a unique experience of the glory of the Dambadeniya Kingdom and some of the delightful wooden masterpieces of artistic creations of wood carvers of the bygone era.

Today, it stands as a unique monument of our ancient transport system. Perhaps, we were the only visitors to the site that day. I always wonder why visitors in Colombo never come here on a trip. Maybe they never knew this magical place even existed.

The road in front of the Ambalama is deserted and only used by the villagers. It is rarely approached by outsiders. We sat down on the huge beams of the Ambalama spending some time to enjoy a cup of tea with ‘Wandu’ a village sweet cake made with flour wrapped in ‘Kenda’ leaves, found abundantly in the wayside thickets.

(By the way, Ambalamas still exist in Colombo too. One good example is found on the Pitakotte-Ethulkotte Road, not far from the Archaeology Department Office. It has no carvings though.)

Friday, December 16, 2016

தமிழர் - கலை - பண்பாடு

இந்த தலைப்பில் மூன்று விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. இவற்றில் எல்லா இனங்களுக்கும் உள்ள இரண்டு பொதுவான விடயங்களான கலை மற்றும் பண்பாடு ஆனது மூன்றாவது விடயமான தமிழர் என்ற இனம் என்பதோடு மட்டும் இணைத்துப் பார்க்கப்படுகின்றது. இங்கு சொல்லப்படுகின்ற மூன்று விடயங்களையும் தனித்தனியே பார்க்க வேண்டும். அதாவது தமிழர் -கலை-பண்பாடு என்பவற்றை தனித்தியான ஆராய்ந்தால் மடடுமே முழுவதையும் இணைத்துப்பார்க்க முடியும்.

முதலில் தமிழர் என்பதை எடுத்துக்கொண்டால் இங்கு எழும் முக்கிய பிரச்சனை தமிழர்களை எவ்வாறு வரையறுப்பது. தமிழ் மொழி பேசுபவர்கள் அனைவரும் தமிழர்களா? அல்லது எந்த மொழி பேசினாலும் அம்மக்களின் மரபணு பண்புகளில் இருந்து தமிழர்களை வரையறுப்பதா?
அல்லது வரலாற்று ரீதியாக தமிழர்களாக இருந்து பல்வேறு நாடுகளில் தமிழ் மொழி தெரியாது வாழும் தமிழ் வம்சாவளியில் வந்தவர்களை குறிப்பிடுவதா? மனிதர்கள் தோன்றிய காலம் முதல் தமிழ் என்ற மொழி பேசும் இனம் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் ஆதியில் பிறந்த தமிழர்கள் எல்லோரும் இன்று அப்படியோ இருக்கிறார்களாபூமியின் சுழற்சி அதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றம், இடப்பெயர்வு, அன்னியராட்சி போன்ற பல்வேறு காரணங்களால் இன்று குறித்த இனம் மடடுமல்ல அநேகமான மனித இனங்கள் எல்லாம் இந்த உலகம் மட்டுமல்ல பிரபஞ்சம் முழுவதுமே இருப்பார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்த எவருமே ஏற்றுக்கொள்வார்கள். அப்படியாயின் தமிழர்கள்  என்று யாரைக்குறிப்பது?
தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களின் மூதாதையர்கள் ஆபிரிக்ககண்டத்தில்  இருந்து வந்தவர்கள் என்று அண்மைக்கால மரபணுப் பரிசோதனைகள் சொல்வதாக கூறப்படுகின்றது. இதே வேளை இலங்கையில் பல்வேறு அரசியல் இராணுவத் தேவைகளுக்காக பல்வேறு இன மொழி பேசியவர்கள் தமிழ் மொழியைப் பேசி, தமிழ் பேசியவர்களை திருமணம் செய்தும், தமிழர் பண்பாடுகள் என்று கூறப்படுபவைகளைப் பின்பற்றியும் வாழ்கின்றமையை அவதானிக்கலாம். இவ்வாறான போக்கு கடந்த 500 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இன்று யார் தமிழர்கள் என்பது வரையறுக்க முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் கலை என்பதை எடுத்துக்கொண்டால்,
கலைகளின் தோற்றத்தைப் பார்க்கும் போது வேட்டையாடிய மனிதன் தன்னுடைய வேட்டை அனுபவத்தை ஏனையவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதற்காக சித்திரங்களை வரைந்ததாகவும், ஓய்வு சேரங்களில் ஆடல் பாடல்களில் ஈடுபட்டதாகவும் வரலாறு சொல்கின்றது. அந்த மனித இனம் தமிழ் பேசியதாக வைத்துக்கொண்டால்இன்று தமிழ் பேசும் அல்லது தமிழர் என்று சொல்லப்படும் ஒருவர் ஏற்பட்ட கால மாற்றத்தால் ஒவியத்துறையில் அல்லது ஏனைய கலைத்துறையில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களை, சிந்தனைகளை உள்வாங்கி தன்னுடைய படைப்புக்களை உருவாக்குவதை தமிழ்நாட்டிலேயே காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மேலாக இன்று ஐரோப்பிய சூழலில் வாழும் தமிழ் பேசும் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய படைப்புக்களை ஒரு கலைப்படைப்பு என்ற அடைப்படையிலேயே நோக்கின்றார். ஆதனை எந்தச் சந்தர்பத்திலும் தமிழ் அல்லது தமிழருடைய படைப்பு  என்று பார்ப்பதில்லை. இன்று உலகில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை மாற்றம் அநேகமாக எல்லாவிதமான கலைப்படைப்புகளையும் கலை என்ற கோணத்தில் மட்டும் பார்க்கும் போக்கு காணப்படுகின்றது. உலகம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உள்வாங்கிய பின்னர் மனித மனங்களில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் சில மனிதக்குழுக்களுக்குரிய கலைகளை பாரம்பரிய அல்லது நாட்டுப்புற கலைவடிவம் என்ற வகையில் வகைப்படுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களின் கலை என்று கூறி நாம் பாதுகாக்கும் ஒன்றை தொடர்ந்து பேணிப்பாதுகாப்பது ஒரு கலைஞனின் ஆற்றலை அல்லது வளர்ச்சியைமட்டுப்படுத்துவது போன்ற செயற்பாடு என்ற எண்ணமே தோன்றுகின்றது.

அடுத்த விடயம் பண்பாடு
ஒரு விலங்கின் நடத்தை என்பது குறித்த விலங்கு வாழும் சூழ்நிலை, அந்த சூழலின் தரைத்தோற்றம், காலநிலை என்பவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது. உதாரணமாக இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நிலவும் காலநிலைக்கு குறித்த மக்களின் உணவுப்பழக்கம் மற்றும் ஆடை அலங்காரங்கள் தோன்றின, அவை தொடர்நதும் பின்பற்றப்பட்டன. காலப்போக்கில் உலக வர்த்தகம் விரிவடைய பிறநாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்கள் மக்களின் உணவுப்பழக்கம், ஆடை அலங்காரங்களில் மாற்றத்தை ஏற்படுத்தின. இக்காலப்பகுதியில் மக்களின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மக்களின் நீண்ட காலப்பழக்க வழங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தின. இவ்வாறான மாற்றங்கள் தமிழர் என்று  சொல்லப்படும் மக்களின் வாழ்வில் கடந்த 200 வருடங்களில் பாரிய மாற்றம் ஏற்பட்டன. பாரிய அளவில் ஏற்படுத்தப்பட்ட கட்டாயக்குடிஏற்றங்கள், பாதுகாப்பிற்கான இடப்பெயர்வுகள், தொழில் ரீதியான இடப்பெயர்வுகள் எல்லாம் மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி தொடர்ச்சியாக பண்பாட்டில் மாற்ங்களை ஏற்படுத்தின. முன்னைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தமிழ் மக்களின் பண்பாடு என்பது இன்றைய தமிழ் மக்களின் பண்பாடு எனப்படுவதோடு பாரிய வேறுபாடுகளை காட்டிநிற்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் எழுகின்ற முக்கிய கேள்வி என்னவெனில்  இன்றைய தொழில்நுட்பம், தொடர்பாடல்கள் இல்லாத ஒரு காலகட்டத்தில் அதாவது இன்றைய காலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் தோன்றிய ஒரு வாழ்க்கை முறையை ஒரு இனத்தின் அடையாளம் அல்லது பாரம்பரியம் என்ற பெயரில் அதனைப்பாதுகாக்க வேண்டுமா? இன்றைக்கு 10 வருடங்களிற்கு முன்னர் வந்த சாதாரண கைத்தொலைபேசியை எந்த மனித இனத்தைச் சேர்ந்த ஒருவருமே உபயோகப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுவது கிடையாது. ஏனெனில் அவ்வாறான கைத்தொலைபேசிகள் இன்று பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதே காரணம்.

இனி தமிழர் கலை பண்பாடு என்ற விடயத்தை முழுமையாக நோக்கினால் தமிழ் பேசுக்கின்ற ஒரு மக்கள் கூட்டம் தங்களுடைய கலை பண்பாடு என்று உறுதியாக வரையறுக்க முடியாத சில வரையறைகளுக்குள் மட்டும் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. இன்று எம்மத்தயில் காணப்படுகின்ற சட்டங்கள் சாதாரண மக்களுக்கு மட்டும் பிரயோகிக்கப்படுகின்ற அதேவேளை குறித்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவர்கள் குறித்த சட்டங்களை மீறி செயலாற்றுவது போல் தமிழ் பேசும் மக்களில்ஒரு சிலர் மட்டும் நிகழும் சமூக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தாங்கள் சிறுவயதில் இருந்து புகுத்தப்பட்ட சில கலை பண்பாடு அதனைக் காப்பாற்றவும், பேணிப்பாதுகாக்கவும் முற்பட்டு அதனை முழுமையாக செய்யாது மனதளவில் துன்பத்திற்கு உள்ளாவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.


தமிழர்கள் எனச்சொல்லப்பபடும் மக்கள் கூட்டம் உலகில் மாற்றங்கள் ஏற்படுவதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து ஏனைய தங்களை இந்த பூமியில் தக்க வைக்கவேண்டும் அதற்கான செயற்பாடுகள் அவசியம். துமிழர் கலை உயர்ந்தது, பண்பாடு சிறந்தது என நம்புவர்கள் அதனைப் பின்பற்றி வாழ்ந்து உயர்ந்து காட்டவேண்டும். இது இவ்வாறு இருக்க யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே சிவம் போன்ற தமிழ்ச் சொற்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.